அலைஞனின் அலைகள்: கணம்

Tuesday, March 22, 2005

மூக்கைத் தோண்டாதே.

பொறு கொஞ்சம்!
மூக்கைத் தோண்டாதே.

ஒத்துக்கொள்கிறேன்;
உன்னதுதான் மூக்கு.
ஒப்புக்கொள்கிறேன்;
ஊத்தைதான் உள்வந்தது.

என்றாலும் பொறு; நக
விரல் நுழைத்து வெளிக்
கழிக்காதே நாற்றச்சளி
உனதென்றாலும்
உன்னிஷ்டப்படி.

நம்நாட்டில்
உள் மூச்சு ஒடுங்கி முட்டும்
உன் மூக்கைத் தொடவும்
தோண்டவும் உண்டு விதி.

உன் ஒல்லிச்சளி
மூக்கு வைத்தியத்துக்கும்
வைத்தியம் சட்டத்துக்கும்
சட்டம் சர்வ அரசுக்கும்
அரசு தேவ ஆலயத்துக்கும்
ஆலயம் தெய்வ ஆகமத்துக்கும்
கீழ்ப்பட்ட படிநிலை ஆச்சோ, பார்,
அதனால், ஆகமம் அவதானித்துச்
சொல்லும் உன் களிச்சளிக்கு
மூக்கு, சரியா பிழையாவென்று.

ஆகமத்துக்குப் பிடித்த சளி
தொடுப்பாய் விதியுண்டு கண்டாயா?

விரையாதே; விண்ணப்பி,
விண் கைதூக்கி, உன்னைப்
பிடித்த சளி தோண்ட ஓர்
உத்தரவு தாருமென்று.

'05 மார்ச், 22; 18:04 கிநிநே.

Tuesday, March 15, 2005

அவரவர் தொழில்கள்

ஆடுவது நான்;
சலங்கையைக் கட்டிக்கொள்வேன்;
காலை விடு.

ஊதுவது நான்;
சங்கைத் தூக்கிக்கொள்வேன்;
கையை எடு.

தோண்டி மருதாணி
தோய்த்துப் பூச ஆசையில்லை;
காயக் கைப் பொறுதி இல்லை.
அரைத்து அள்ளிய சாயம் அனைத்தும்
உனக்கே; விரியக் கை பதுக்கிக்கொள்.

இனி என்ன செய்வதென்று என்னைக் கேளாதே.
திருப்பு உன் முகத்தை; கண்டாயா, கதவும் தெருவும்?
முதுகு குறுக்கிப் போ; மெல்ல முனகாதே உனக்குள்.
வெளிப் பார்ப்பாய்: - விரிந்திருக்கும் விண்;
நட நெடுக்கே; தந்திக்கம்பம் கண்டால் தரி கணம்.
கால் தூக்கிச் சர் என்றடி சலம்; பட்டமரம் ஒன்றுதான்
சுனைப்பட்டுத் திரும்பச் சுர்ரென்று பேசாதென்றறி.

சிறுபிள்ளைத்தமிழ் சொன்னால்,
உன் பருத்த தலைக்குள்ளும் முளை
சுரக்கும் என்றாயா, சொன்னேன்.

புரிந்ததுக்குப் பெருநன்றி.

இனி, உன்னித் திரும்பாதே;
ஓயாமல் நிழல் தொடர நட;
இன்னும் இருக்குமாம் வழி
எண்ணில்லாத் தந்திமரம்.

அடுத்த முறை சக மனுஷனாய் வா;
அமர்ந்திருந்து கதைப்போம் ஆறி.

'05 மார்ச் 15, 18:33 கிநிநே.

Tuesday, March 08, 2005

தரவு

உயிர்மெய்யென்று ஏதுமில்லை,
இனி எல்லாமே வெறுந்தரவு:
எனது, உனது, அடுத்திருந்து
அவதானிக்கும் அவனது.

எதிர்காலத் தெங்கும் எல்லாமே
ஏனென்றில்லாமற் செல்லுபடியாகும்
என்றானதால், எதிர்த்தாற் போல் வரும்
எதையுங் கண் இடுங்கக் கவனங்கொள்:

என் நெடுமூக்குக்குக் கீழான சளியை,
உன் முன்னுதட்டுக்கு மேலான மறுவை,
அவன் முடிதன் நுனிக்கறுப்பை, வேர்வெளுப்பை,
காலூரும் கறுப்பெறும்பை, இவ்வூரில்லாச் சிவப்பெறும்பை.

சுட்டு விரலிடுக்குச் சொட்டு அழுக்கைக்கூட,
வட்டப்பெருவிரல்நகம் சுண்டிக் கழிக்கமுன்.
- தரித்து ஒரு கணம் -
உனக்குள் எண்ணிக்கொள்;
கறளோடு தொலைந்து போகிறதா,
தரவுத்துகளேதும் காற்றில்?

காத்திருந்து பார்;
தரவு கிறுக்கும் தள ஒழுக்கில்
ஓயா துருளும் ஒரு தட்டாகும்
நாம் வாழுலகம்.

விரைந்தான் வெல்வான்.

'05 மார்ச் 08 02:09 கிநிநே.