அலைஞனின் அலைகள்: கணம்

Wednesday, January 07, 2015

அரசன் குறை

அரசன் குறை
------------------


"கொலையுண்டார் மனுசர்"
என்றேன்.

"பொறுத்திருந்து பார்ப்போம்"
சொன்னார், முத்தெனத்
தத்துவம் புத்தகமிருந்து
தின்றார் பொறுக்கி.

வருமோர் இருள்நாள்,
"இன்னும் கொலையுண்டார்"
என்பேன்.

"இனி ஒரு
முறை பொறுப்போம்"
சொல்வார், இன்னொரு
தத்துவம் இனிதே
மெல்வார் சப்பி.

பின்னொரு பொழுது
'இன்றும் கொலையுண்டார்"
என்ற காலை,

"இனிப் பொறுப்பதில்லை
கண்டேன் யான்"
என்றெகிறித்
துள்ளி நின்றார்,
"விழுந்த தலை கீறி ஆய்ந்து
படுகொலையின் உட்தூங்கு
தத்துவதர்மம் விண்டேன்.
இனியும் பொறுப்பதில்லை
எம் முன்பதிப்பே
ஆகுங்காண்
தமிழ்கொள் முதல்
அருஞ்செம்பதிப்பே,"
சொன்னவர்
தாடி கோதி
அறிவு சீவிச்
சென்றார் பாதை
பதிய புதிய
வேளை அண்ணாந்து
பார்த்து நடப்பார்
அடுத்துத் தடக்கும்
அறிவுசீவிச்சிறு
புள்ளார் புல்லார்.

தலை
கொள்ளும்
தத்துவம்
முக்கியம் - பின்
இலக்கியம்! ஆத்ம
தரிசனம்!

தத்துக்கா!*
பித்துக்கா!*
தொத்துக்கா!*
நிறையச்
சா!*



சீராக்கா முதற்படி: January 30, 2011
திருத்தம்: ஜூன் 10, 2023
*தூண்டலுக்கு நன்றி: தவளைக்கவிதை -பிரமிள்

0பின்னூடுகை:

Post a Comment

<< Home