அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, December 25, 2004

அந்தகக்கவிக்கான அ(¨)வத்திரை

அந்தகக்கவிக்கும் அரசனுக்கு மிடை அவிழ்
திரை தொங் கவை யென்றான வாழ்வறை;
எரியும் உலைகளும் எளிய மனிதரும் புரி
நூல் திரிந்து கீற்றாய்ப் பொசிந்து புகை பரவ,
உருட்டி உருட்டி உண்கி றேனென் உணவை;
எண்ணெய்த்தேச எரிகொள்ளிக்கிடை
பதுங்கிப் பருகுநீருக்கலை சிறுவர்
கண் தெரியும் பயத்தை, பசியை,
துரத்தித் தனக்குள் அமுக்கி,
எனக்குப் பிதுக்கும் படக்கருவி.
ஓலமும் உறுமலும் ஓருடல் கூறும்
அர்த்தநாரீஸ்வரம்; அறைச்சுவர்
அதிர்ந்து அனுங்கி அமுங்கும்;
அடக்கம்,
அடுத்த ஒப்பாரி வரை நிலைக்கும்.
அத்தனை ஆயுததாரிகளும்
பொய்யைப் மெல்லப் பிடியென்று
அள்ளித் தருகிறார் அவல்;
கிள்ளி மெல்ல மெல்ல,
இன்னும் விரியுமாம்
குசேலர் தேசத்தே கூற்றுவன் நாட்டியம்.
உள்ள முத்திரை,
முழுதாய்த் தோற்றுமோ திரை?
என்னைவிட எவரேனும் கண்டீரா,
எரிந்த தெரியாதா தென் றிலா
தெல்லாப் பிணங்களின் திறந்த கண்களும்
இ·தெதற்கென்று கேட்பதை?

தொடர்ந்து
தொலைந்த பருவப்பெண்களையும்
தொலையா நோய்க்கிருமியையும்கூடப்
பின்னுக்கு வன்மையாய்த் தள்ளிப்
பொல்லாப்போரைத் துப்புதென்
தொலைக்காட்சி.

ஜன்னலின் பின்னால்,
கண்ணிருண்டு காயும் வெறுவானம்;
கீழ் உதரம் கனத் தரக்கி யரக்கி நகரும் கயர்மேகம்.
இரவு பகலின்றி
இடைவிடாது பருகிக்கொண்டிருக்கின்றேன்
என்னுடைய நீரையும் நீருக்கலைவார் துயரையும்.

எப்பொழுதும்போல, இப்பொழுதும்
ஆயுதங்கள் மட்டும் அழுத்தமாய்
நெறிச்சாத்திரங்கள் போதிக்கிறன.

'03 மார்ச், 31 திங்கள் 04:54 மநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home