அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

போனபின்...

இறந்தபின்,
எனது கடிகாரத்தை முறித்துவிடு
காலம் கடந்தபின் அ·துனக்குக் காட்டப்போவது,
நிழல்களுக்கு மட்டும் நினைவு படரும் நேரங்களை
என்றாகக்கூடும் என்று புரிந்து கொள்கின்றேன்.

நான் கடந்து போனபின்,
காற்தடயங்களை மணலுட் புதைத்துவிடு.
அந்த அடிகளிற் தொலைந்த மணலையெண்ணி
திசையை மறுக்கக்கூடும் என் தேசத்தை
எண்ணிப்பார்க்கமுடிகின்றது எனக்குள் இப்போது.

முடிந்துபோனபின்,
என் முகத்திரையைக் கிழித்துவிடு.
உள்ளுக்குள்ளொரு முகமில்லை,
உறைந்த குருதியும் நிணமும் சதையுமே
உருகி வழியக்கிடந்தது ஒவ்வொருவர்போலவும்
என்று உலகறியக்கூடட்டும் என்றென் விழைவு.

என் முடிவு மூச்சுக்காற்றை
வெளியிலே கலந்ததற்காகக்கூட
கவலைப்படுகின்ற நாட்டார் வாழக்கூடுமானால்மட்டும்,
என் பெயரால் அவர்க்கு உரத்துச் சொல் ஒரு கூற்று,
"கட்டின்றி களிப்பில் புடைத்து அலையும் பொருள்
புவிமேலே என் அடிக்காற்று."

தேசக்காற்றையும்கூட திசைபற்றித் திருப்பி
இழுத்திறுக்கிக் கட்டவிரும்புகின்றவர்களுக்காக,
நீயும் நானும் கவலைப்படமுடியாது காதலி.

'00, Dec. 12, Mon 04:57 CST

0பின்னூடுகை:

Post a Comment

<< Home