அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 20, 2004

அப்பப்பா ஒரு பரியாரி

My grandfather was a spin-doctor and witch-hunter

அப்பப்பா ஒரு பரியாரி;
பக்கவாத்திய செப்படிவித்தை, செய்வினை சூனியம்
- உபபடி.


உமிப்பெட்டிக்குள் மூடிய முட்டை
அவர் இரட்டைக்கைதட்ட, கனைக்க,
பெட்டைக்குஞ்சாய்ப் பஞ்சு சடைக்கும்;
குறுகுறுத்து குறுநடைக்கும்; நிலம் கிறுக்கும்;
குறுணி அரிசி ஊத்தைமணலுட் தேடும் கூனல்மூக்கு.
குஞ்சு நடை சலிக்க, மதியம் அவிக்க,
மூளைக்கு வெண்முட்டைத்தவனமெடுத்தால்,
கவிழ்கூடைக்குள் கதறிப்போகும் சிட்டு;
நட்டுவனராய்த் தட்டுவார் கூடைத்தலை, முழப்பூவரசந்தடி.
கொக்கரி சத்தம் சட்டெனச் சாக,
திறந்த கூடைக்குள் உருளும் திரண்டு கோழிமுட்டை.
அப்பொழுதில், முட்டைதின் நாக்குத்தவனமோ
முற்றிலும் செத்துப்போச்சாம் அவர்க்கு;
பின், முட்டை தன்பாதி உதரம் உட்தாட்டுத் தூங்கும்
அரைநித்திரைப் பக்குவத்தில், உத்தரவிதானத்து உள்ளறையில்,
வாயிறுக்கிக்கட்டிய வட்டத்தவிட்டுப்பெட்டியுள்.
இப்படியாய், முட்டையும் குஞ்சும் சுற்றிச்சுற்றிப்
பிறக்கும்; பருக்கும், நடக்கும், பறக்கும்,
படுக்கும், சுருக்கும், முடுக்கும், துளிர்க்கும்,
மீளச் செட்டையடிக்கச் சிட்டென்று பிறக்கும்.
சுத்தமாய் முட்டை அவித்துரித்துத் தின்னாமல்,
முழுப்பெட்டைக்கோழியாய் முட்டையிட்டுக் காணி குதறி உலவாமல்,
முட்டைக்கோ குஞ்சுக்கோ முழுதடையெல்லோ வாழ்சுற்றென்ற
இந்த முட்டாளின் கேள்வி மட்டும் பிடிக்காது மூத்த பரியாரிக்கு.

"முட்டைக்கு உயிரில்லை; குஞ்சுக்கு மதியில்லை; அப்படியானதினால்,
இதை இட்டுக்கட்டிக் காக்கும் பக்குவப்பொறுப்பு, என் தென்னந்தலைக்கு."
இப்படியாய் ஒரு பதில்.
"முட்டாளே! ஆசைக்கு அவித்துத்தின்றால், அந்த முட்டை போச்சு;
அளவுமீறி வளர்த்துவிட்டால், கிழமாகி, கோழி, சுருங்கிச் சாகும் சூறு.
நாசமறுவானே! நல்லற்ப உயிரொன்று அய்யோவென்று
செத்துப்போக வேண்டும் என்பதோ உன் சித்தம்?"
-இன்னொருபோது, இப்படியுமாகும் எனக்கான பதில்.

"மூத்த பரியாரி, அற்ப உயிருக்கும் சொற்ப
வில்லங்கமும் கிட்டச் சொட்டவிடா உத்தமனாம்"
என்றது நித்தமும் சுற்றம், சூழல்.
அவருறவு வலுகிட்டடியில் ஒட்டியதால், ஊர்ப்புத்தியிலே
ஒளிர்ந்தொழுகியது முகமெல்லாம் எனக்கும் நல்வித்தகம்.

இத்தனையும்,
அடியுண்மை அவர் செத்துப்போம்நிலையில்
மொத்தமாய்க் கட்டுடைத்துப் புட்டுச்சொல்லும்வரை,
திமிர்த்து நிமிர்த்தின தம்நெஞ்சு,
திடத்த வல்முதிரை உலக்கையாம் தாம்:

"எதிர்க்கழுகைப் பிடிக்கச் சிறுகுஞ்சைக்காட்டு;
காலத்தைக் கடத்த, வை கைமுட்டையைத் தாட்டு.
தறிக்காதே என்றைக்கும் பொன்முட்டைத்தாரா தலை.
உள்ளுக்குள் முட்டையோ குஞ்சோ முக்கியமில்லை;
உன் அடுத்த நிமிட இருப்பு. எல்லாமே,
இற்றைப்பாட்டுக்குக்கான தாக்காட்டுத்தாலாட்டு."


அப்படியாய்ச் செத்துப்போன என் அப்பப்பா ஒரு பரியாரி;
இப்ப பார்த்தால்,
பக்கவாத்திய செப்படிவித்தை, செய்வினை சூனியம்
-இப்படித்தான் வழி வந்தது, வரும்வழி முற்றிலும்
கைநக்கிச் சப்பிச்சாப்பிட அவர்க்கு வரும்படி.

'01, நவம்பர், 07

0பின்னூடுகை:

Post a Comment

<< Home