அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 20, 2004

PTA-POTO-PATRIOT

~~~~~
இப்படியாய்,
எங்கள் தங்க மகராசாவுக்கு,
பற்றைக்குளிருந்து பாம்பு பாய்ந்தபின்னே
காலிலே கடியும் அரையிலே நெறியும்
இழுப்படிக்கும் கடுப்பான
அடுப்புக்காலமொன்றுக்காய்த்தான் காத்திருந்தேன்.

காற்சட்டை (ழி)ஜிப்பை இழுத்தறுத்து,
பொத்தி வாய் மேலே தைத்துக்கொண்டேன்.
என்னைப்போல், உன்னைப்போல்
பரந்த தெருவின் பகற்பொழுதில்
ஆண்குறி தெரிய இன்னும் பலர் அலையக்கண்டேன்.

சத்தமில்லாக்காட்டில் செத்த சங்கேதம் செய்தி பேசாதோ?
எல்லாச் சங்கதிக்கும் கைச்சைகைகளைமட்டும்
சாக்கிட்டு சாயையிட்டு
நடுவிரலை நட்டுயர்த்திக்காட்டிக்கொண்டோம்
உச்சந்தலைச்சூரியனுக்கு;
நமக்கே வெற்றி.

பாலோ பியரோ ஏற்றியவிதத்திலே ஏற்றிக்கொண்டோமுடலில்.
சேர்ந்தது சேர்த்தது செரிமானமாகித்தான் ஆகவேண்டுமாதலால்
ஏற்றியவிதத்திலே எதையுமே ஏற்றுக்கொண்டோமெம்முடலில்.

காற்றுப் போனது, ஆடுகிற காகிதத்து அடிப்பொலியில்,
மூக்கிலா மூலத்தூடா என்பதில்லையாம் முக்கியம்;
களைப்பின்றி ஓசைப்படக் காற்றுப்போனதே களிப்பாகும்;
கண் விரி; நல்லாய்க் காண்.

*****

பெண்கள் என்ன பண்ணினார்கள் என்று
பேசிக்கொள்ள எவர்க்கும் பொறுதியில்லை.
கண்கள் மட்டும் கறுப்புடைக்குட் தெரிந்ததாம்.
திரைக்குப் பின்னால்,
வாயிழுப்பான் இருந்தென்ன? இழுத்தென்ன?

*****

எங்கும்போல், என்றும்போல்,
எங்கள் அரைநெறி ராசாவும்
இன்னும் அரைவெறியில் அங்குமிங்கும்
அலைந்துகொண்டுதான் இருக்கிறார்.

தீர, தீரச்தெருச்சண்டைகள் ஒன்றிரண்டு தேவை.
வாரீர்! வாரீர்!! வாரி வழங்கீரோ நல்வாய்ப்பு?

*****

நான் போய் அற்ற திரிசங்கு சொர்க்க நட்சத்திரம்பற்றி
பற்றற்று உற்றதொரு வற்றற்குழம்பாய்க்கதை வடிப்பேன்.
நம்ப மறுத்தால்,
தொடர்நிழலாய் வந்து பார் பின்னே.....
..... நான் நகர்த்தவில்லை நுனிநாக்கும்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home