அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, December 25, 2004

இரவின் தலைப்பிலி~1

ஏனென்று கேளாதீர்கள்.
இரவின் கண்ணுக்குள் எல்லாம் எனக்குள் மாறுகிறது.

அடர்ந்த குகைக்குள் கண் அவிந்த நிழற்சந்நியாசியாக
அலைந்துகொண்டிருக்கும் ஆரம்பங்கள் கிழம்படவும்
களம் பின்வாங்கித் தோன்றித் தொடர்ந்து,
அரங்கின் ஆரம்பத்துக்கே திரை தொடங்க வருகிறேனோ?

சங்கம்புழையையும் மாயகோவ்ஸ்கியையும் அங்கங்கே
செவிவழிச் செய்தியாயும் உதிர்ந்த சிறகுகளாகவும்
அறிந்ததன்மேலாக அறிந்து கொண்டிருக்கவேண்டியது
இவன் கட்டாயம் என்றில்லையென்றாலும்கூட,
ஆத்மாநாமின் ஆவி திறக்கும் ஆழக்கிணற்றின்
அவிசுண்ணக்காளவாயைத் தவிர்க்கமுடியவில்லை.

நில்லா நேர்பாதையாய், கால்கீழே மூண்டு கருங்கோடு நடுங்கக் கீறி
கடல்நீரோடு நெடுவான் வீழ்ந்தூரச் சாயும் தொடுவரைகிடுகும் பிரித்துத் துளைத்து
நீண்டுகொண்டே போகிறது நேற்றைய நாட்பொழுதென் றொரு போதும்,
உரு வரையில்லாக் கணம் ஒன்று வைத்தபடி
தன்னுள் என்னை எ·குத்தாழ் பூட்டி, நீர் வியர்க்கத் தரித்து,
சாறூறத் தாம்பூலம் தின்று துப்பித் தின்று துப்பி, தப்பலில்லா
அசைபோடும் அசைவின்மை யிதுவேயென்று மறு போதும்
-புரிகின்ற இப்பொழுது,
உடல் ஒட்டிய ஒன்றா, ஒன்றுபடாப் பக்கவாட்டு நகர்வா,
எதேச்சையாய்க் குத்தெனக் கூறிவெட்டுவதா
என்பதென் இரவுகள்.

ஒழிந்த தசாப்தங்களுக்குரிய ஓயாத உணர்கோஷங்களின் தொகுப்பை
முகமடித்து வீசும் ஒரு தென்திசைக்காற்றின் கந்தக நாற்றத்தை
காரமூச்சிழுத்து கரகரக்கப்பாடும் வேலை சிதறிய நடைசாலை
ஓட்டைச்சொல்கொட்டியின் காறற் றுப்பலைத் தருவது என் வாய்.

முகத்தை முன்னுக்கு வைத்துக்கொண்டு,
மூளையைப் பின்னோக்கித் தள்ளும்
சாமப்பொழுதின் கிளைத்த கைகளின் நகத்தழும்புகள்
வரித்துக்கொண்ட என் கழுத்துத்தடி;
கால் நில்லாக் காய்ச்சற் றுடிப்புகள்
அலைபாயும் மேலுக்கும் கீழுக்கும்.

எதேச்சை மூர்க்கத்தில் சாலைமேடுகுழி மோதிச் சுயம் போகிற
இரும்புத்துருக்கோளத்துள்ளிருந்து,
கீறல் படாமல் வெளிக்குதிப்பதெப்படி என்ற
வித்தை கற்றதன் சாரம் செப்பத்துணி
மௌனப்புத்தர்கள் சுயமறு சித்தர்கள்
அருட்சொட்டுச்சொல்லின்பின்,
என் கட்டைவிரல் கேட்கலாம்.

குறைந்தபட்சம் இந்தப் புத்திசீவிகள், போதனாசிரியர்களின்
-எனக்குரிய எழுத்து, இசை, நினைப்பு, நடப்பு, காலம், கழிவறை-
எல்லாத்துக்கும் நல்லதெது தீயதெது வகுக்கும் எல்லைக்கோட்டை
வல்லமையில் வயிறறைந்து எச்சில் துப்பிக் காலாலழிக்கும்
சின்ன முட்சப்பாத்துக்குருகூட சாத்தியப்படுத்தலாம்
என் அடைகாலக்குமிழ்வெடிப்பு.

அறிவீர்களா,
ஆத்மாநாமின் அந்தக்கிணறு புசிக்கும் வாய் பெருத்தது.
அதன் முதிர்ந்த பின்புறத்திலே பிதுங்குவதோ,
அண்டம்பேசும் அடர் கருந்துளை?

0பின்னூடுகை:

Post a Comment

<< Home