அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 20, 2004

Wagging the Dog in 1984

மண்டை நிமிண்டி, முன்னுச்சி மயிர்பிளந்து,
வெல்லப் பொழுது மெல்ல மென்று மீளரைத்து
எண்ணக்கரு தின்றும் கவி கதை சிலை சித்திரம்
என்றேதும் முளையாமல் பின்னைக்குப் பார்ப்போ
மென்றுடற் றண்டைக்கிடைப்போட்டுத் தூங்கி,
விடிந்தெழுந்தான் கலைஞன் மோசிகீரனாய்; இனி,
கலைவாழ்வுக்கு அரசுவீசும் கற்பனைச்சாமரை.

~~

இன்று முதல்,
கடிதக்கிண்ணத்தில் வரும் கருத்து;
கதை முடிவு முன்னுக்கு வரும்;
தலைப்பு வால் பின்னுக்கு வரும்; நீளும்.
கணநேரக்கதாபாத்திரம் போட்டிருக்கும்
உட்கச்சைக்கும்கூட விழும் கரும்பன்புள்ளி.

நாசி நச்சுநெடிபட,
அரசுக்கோப்புக்குட் தூங்கும்
படக்கலைக்கருத்துநெறி.

கதைநடையில் உரைபடு நீதியெல்லாம்,
பத்துக்கட்டளைக்குட் பத்திரப்பட்டிருக்கும்
என்றொரு பச்சைப்பொய்மட்டுமே விற்கப்படும்.

சட்ட நுணுக்கங்கள், சம்பிரதாயங்கள்
கத்தரித்துத் தைத்தாடையாய் வரும்
விற்பனைப்படுதலுக்கு; முன்தோற்கும்
விளம்பரம் தம் நிமிடப்பொய்முகம்.

புத்தகத்துக் கட்டைப்படம்
போடும் பொறுப்புமட்டும்
பத்துத்துண்டாய்ப் பங்கிடப்படும்,
பத்திரிகையாளர்,
பத்தி எழுத்தாளர்,
பதிப்பாசிரியர்,
பதிப்பாளர்
என்ற பட்டியல் வரிசையிலே.

பத்துக்கு மூன்றுக்கு ஒன்று என்பதுபோல்
சித்திர வர்ணக்கலவைக்கும் விதிவரை வரும்.
சொட்டும் கூடாது குறையாது கலந்து
நடத்தலெல்லாம் கலைநாட்டியம்தான்.
படைத்தலென்றால், முன்
படைக்கப்பட்டதைப் பண்
பிரித்துக்கோர்த்துப் பின்
பக்குவமாய்ப் பத்திரப்படுத்தென்றாகும்.

மிச்சத்தொழிலெல்லாம்,
மோசிகீரனுக்குச்
சாமரம், கவுரி, சந்தன மயிற்பீலி;
எட்டத்திருந்து வீசும் அரசுத்துறை;
சட்டப்பெட்டகம் சொல்லும் சரிபிழை.

~~

சோக்கிரட்டீஸ¤க்கு
ஒற்றைக்கோப்பைக்குள்ளே
எடுப்பதா கோர்ப்பதாவென்
றொடுங்கிப்போனதுலகம்;
சுற்றித் தப்ப வழியிருந்தும்
நகக்கண்ணும் சப்பி நக்கி
முடித்தான் முழுச்சொட்டும்.

எமக்கானதோ,
கலிலியோவின் நடுவிரலை
இன்னொருநாள் சேவிப்போம்
என்றியங்கும் தினபயக்காலம்.

சொன்னேனா? அன்றே
செத்துப்போனான் சோக்கிரட்டீஸ்.

16, நவம்பர் 2001 வெள்ளி 04:14 மநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home