அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

யானைக்கால் கவிதை

காற்றுமதலைதன் கதறற் கைதட்டற் சத்தம்;
அலைகளின் வீச்சத்தின் மச்சத்தின் மொழிபெயர்ப்பு;
அருவியின் ஓட்டத்தே அடிபட்ட சிறுகற்கள்
மனக்கருவின் கவிவலைக்குள் முடக்குண்ட வண்ணத்துப்பூச்சி.

கதறல்சத்தமும் காற்றுமதலையும்;
மச்சம் மொழிபெயர்த்த அலைகள்தம் வீச்சம்;
கற்கள் அடித்து முடமாகும் ஆற்றோட்டம்;
பட்டுப்பூச்சி சுற்றிச் சிக்கிய கவிவலை.

கதறல் சத்தமிட்டு காற்றுமதலை;
அலைகளின் வீச்சத்தை மீன்கள் மொழிபெயர்க்கும்;
நோக அடித்தோடும் கற்கள், அருவி;
கவிச்சிறைக்குள் சிறகுடைந்த வண்ணத்துப்பூச்சி.

காற்றில் சத்தமிட்டு கதறல் மதலை;
மீன்களின் வீச்சத்தை அலைகள் மொழி பெயர்க்கும்;
கற்கள் அடித்து அருவி நொந்து அழும்;
வண்ணத்துப்பூச்சி அடித்துடைந்த கவிச்சிறைக்கரு.

அலைகளின் வீச்சத்தை மீன்கள் எப்படி மொழிபெயர்க்கும்?
தம் கண்ணீரையும் ஆற்றுத்தண்ணீரையும் முதலை எங்ஙனம் வேறுபிரிக்கும்?
அருவிகளின் ஓட்டத்தை, அடிபடும் கற்கள்...?
காற்றின் சேட்டையை, காட்டு மரங்கள்....?


...புலன்நுளம்பின் புறப்புலம் குறையாய் உள்வாங்கு கணங்களிலே,
யானைக்கால் கருவொன்றில்
அடித்தழித்தழித்தடித்து கோரத்தழும்பேற்றும் சொற்சிதையல்;
யாத்தவனுக்கும் பார்த்தவனுக்கும் இடைப்பட்ட புரிதலைப் பொறுத்ததாம்
முடத்தின் பூரணமும் பிறைவளைவும்.
முற்றிப் பழுக்கா மூளிக்கு இடுக பெயர்
முற்றிய யானைக்கால் கவிதை.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home