அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

இனிவரும் சிலிக்கன் தேசத்தான்

எண்சூத்திரத்திற் தொங்கும் தேசத்திருந்தோர்
எதிர்காலப்பிரஜையின் இனிய வந்தனங்கள்.

சிலிக்கன்சிறகுகட்குள் அடங்கிப் பதுங்கும் சிந்தை எமது.

விரல்நுனிச்சொடுக்கில் உள்விழுந்து
உடைந்தழியும் வெளித்தொலைவு.

எழுத்துக்களை என்றோ தின்று தீர்த்துவிட்டோம்;
எம் இருப்புக்கு இனி என்றைக்கும் விரல்மரம் வளர்த்த எண்களே
முற்றாய்ப் போதும்.

குடிப்பதற்கு ஈரடிமானம்;
சிரிப்பதற்கு ஐந்தடிமானம்;
நடப்பதற்கு எண்ணடிமானம்;
இருப்பதற்கு பத்தடிமானம்;
பத்தடிமானத்தையும் விஞ்சிப் புணர்ந்தால்,
இரவில் இடம் மாற்றிப் பொருத்திக் கொள்வோம்,
தின்று திகட்ட மிஞ்சு எழுத்துக்களையும்கூட
வகுத்துப் பெருக்கும் எண்களெனப் பெயர்பூசி.

இன்றைய எம்பூமி, குறியீடுகளின் சங்கேததேசம்;
> = + & $ #
இடையிடையே எண்களின் வெளிச்சவீட்டு ஒளித்தெளிப்புப்புரோகிதம்.
திட்டமாய் எண் கோர்த்துக் குறிக்கத்தெரிந்த கனவான்கள்,
பிழைக்கத்தெரிந்த பாக்கியவான்கள்; ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
பெட்டி நிறைத்து எழுத்துக்களை இனியும் பற்றித் தின்னத் தவிக்கும்
மற்றோர்,
சொற்பொறுக்குதலில் உருகிக்கரைவார்கள்.
இனி ஆங்காங்கே, அடுக்குச் சொல்லிடுக்குகளில் மனக்கருத்துக்களை
ஒளித்துவைத்தல்
இயலாது;
மொழி எழுத்துக்களின் பிரயோகம், தேசத்தின் கால, இட
சேதாரம்விளை செலவீன
வகுப்படங்கும்.
சட்டம், எண்களின் இருப்புக்காய், எழுத்தைச் சாகடிக்கத் திட்ட
அறிக்கைவிட்டுள்ளது.

அடர்எண்களின் அடர்த்திக்குள் செறிந்து தூங்கச்செய்யப்படும் உயிர்களின்
செயல்கள்.
உயிர்களின் கண்டம் உயிரிலிகளின் கையில்.
உணர்வுகள், பூச்சியத்துக்கும் ஒன்றுக்குமிடையே ஏதோவோர் பகுதிப்பின்னம்.
பெருக்கத்தைச் சுருக்கலும்,
சுருக்கலை தேவைக்கு மட்டும் விரித்துப் பிதுக்கி,
மீளச் சுருக்கிப் பதுக்கலும்
வரும் தின வாழ்க்கையின் ஆதார சாரம்.

எமதுலகம்,
நுனி சுருக்கி
தரிசனத்துக் கோபுரத்தே
தனியாகத் தெறித்திருக்கும்
பல காகத்தீவுகள்.

'99/08/14 சனி

0பின்னூடுகை:

Post a Comment

<< Home