அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

நானும் நாய்களும்

கடி வேட்டை நாய்களுக்கெதிரான
என் வேக ஓட்டத்தின் பின் தொடரும்,
தெரு வீதி நொண்டி நாய்களுக்கெதிரான
கால் வீச்சு உதையும் கல்வீச்சு நிகழ்வும்.

நேற்றைக்கிதுபோல,
இன்றைய நேரத்திற்கிதுபோல,
நினைவுக்கெட்டிய நாளெல்லாம் இதுபோல...

வேட்டை நாய்கள் பற்கள் போன்றே,
கொடும் கூரானவை,
அவைதம் மூளைக் கலங்கள், நரம்புகள்;
முளைகள் எல்லாம் முன்னே முட்கள் பிசிறி,
சண்டைச்சேவல் கொண்டைகளாய் சிலும்பி...

அவற்றின் சித்தத்தில்,
மனிதர், கோழி
சதைகளும் எலும்புகளுமே
கொழித்துக்
குலுங்கிப்
பிதுங்கும்
சமையற்குறிப்புப்புத்தக
வண்ண வரைபடங்களாக.

நொண்டி நாய்களோ,
உடல் போலவே மனதாலும் நொந்துபோனவை.
நாளைப் பொழுது உணவு கிடைக்கும் வரை
நக்கிக்கொண்டிருக்கும் தம் நாட்பட்ட உடற்புண்கள்.
கல்லடி பட்டாலும் காலுதை பட்டாலும்
மெல்லத் தம்முள் வருந்திக் கொண்டு
தெரு மூலைக்குட் பதுங்கும்;
நாட்பட்ட சோறோ,
இல்லை,
ஈரப்பதம் செத்த ரொட்டியோ
மட்டும் நிலைத்து நிற்கும்
அவை சித்தத்தே.

இவற்றின் இடைப்பட்ட,
துவிச்சக்கரப் பயணி நான்.
எனது பயணத்தில்,
வேட்டைநாய்களின் காட்டினிலே,
நான் ஒரு நொண்டி நாய்.
முட ஞமலிகள் தெருக்களினிலே,
நான் ஒரு கூரான கடி விலங்கு.

என் சிந்தனைத்தளத்தில்,
கடி நாயோடு போராட முடியாது
கடிவாளம் போட்டிருக்கும்
அறிவு.
அவற்றால் பட்ட துயர்,
தூசு தட்டிக் கழியும்,
எட்டி இரண்டு முட நாய் உதைப்பில்,
என் உணர்வுத்திருப்திக்கு.

கடி நாய்களை உதைக்கும் காலத்தைக்
காத்திருக்கும் பொழுதுகளில்,
என் இயலாமையினால்,
முட நாய்களை உதைக்காமலும்
இருக்க்கமுடியவில்லை.
நாய்கள் என்று மட்டுமே,
வெறிநாய்க்காட்டுக்கும்
சொறிநாய்வீதிக்குமிடையே
என் உணர்வுக்குப் பாதை
தெரிகின்றது.

ஆனால்,
உதைத்து விட்டு,
வீட்டுக்குப் போய்,
மூலைச்சுவரில்
சக்கரவண்டி சாத்துகையில்,
மௌனத்தில், மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்,
அந்தச் சில அப்பாவி நாய்களிடம்,
என் மதத்தின் மூர்க்கத்தின் மூலம்,
கடிவாளம் அற்ற காட்டு நாய்களின்
அப்பாவியிற் பல் பதிக்கும் அற்ப செயல்கள்
என்பதை எனக்குளேயே எடுத்துச் சொல்லி......

புரையோடிப்போன புண்களில்
புழு கொழுத்து அவதிப்படும்
அப்பாவி நாய்கள் அறியப்போவதில்லைத்தான்,
என் செயலின் அற்பத்தனத்தின் ஆதிமூலம்.

ஆனாலும்,
வெறி மிஞ்சிப்போனால்,
ஒரு நாள்,
கடி விலங்குகள்
என் கைத்துப்பாக்கிக்குண்டுகட்கு,
தம் நெற்றிப்பொட்டில்
திலகம் வைத்துச் செத்துச் சாய்கையிலே,
முட நாய்கள் அறியும்,
என் மூர்க்கம்,
முற்றிலும் பிறழ்ந்ததல்லவென்று.

நாய்கட்கும் நீதி கேட்கும் நியாயம் உண்டு என்பதுபோல்
என் நியாயம் புரியும் பக்குவமும் நெஞ்சிருக்கும் என்ற
நம்பிக்கை.
அவற்றிற்குத் தெரியும்,
கடி நாய்க்கும் முடநாய்க்கும் உள்ளே பல்பேதமிருந்தாலும்,
இல்லை, வெளித்தூங்கு நீள்மூஞ்சியில்
ஏதும் பாடபேதமென்று.

முட நாய்கள்,
என் மூர்க்கத்தைப் புரிந்து கொள்ளமட்டுமே
என் இன்றைய காலைப் பிராத்தனை,
கடிநாய்கள் என் காலைப் பதம் பார்க்கத்தொடங்கிய
காலம் தொட்ட காலைகள் எல்லாம் போல.

- '98 ஐப்பசி

0பின்னூடுகை:

Post a Comment

<< Home