அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

என்னூர்த் தூற்றல்மழை

மின்னல்,
வானத்தின் கைரேகை
ககனத்திற் கணம் வரைந்திருக்க
திருப்தி செத்து இன்றும்
அழித்துப்போகும் தூற்றல்மழை.
குளிர்மழை மனதின் அகவெம்மை அறியாது
இடி கைகொட்டிப் பேரடியாய்ச் சிரிக்கும்,
கைக்கோல் கால் தடக்கி,
கயிறிருந்து விழுந்த குள்ளக்கோமாளியின்
உடல் வேதனை புரியாது
வேடிக்கை என்றெண்ணி
தாய் மார்முலையில்
முகத்தடம் பதித்திருந்து
நகைத்திருக்கும் சிறுகுழந்தை போல.
பூமிப்பெண் மட்டும்,
பூத்திருந்த பொழுதுதொட்டு
பொங்கிவந்து பூட்டிப்பொத்திவைத்த
பெருங்காமவெம்மையெல்லாம்
பொசுக்கிப் போக்கிவைப்பாள்,
மழையின் வெம்மையைத் தான்கூ(ட்)டி.
பக்குவம் புரிந்ததுவாய்
புழுதி மணக்கும் போக்குக்காட்ட.
காற்று, தான் இந்தக் கள்ளக்கலவிக்கு,
இருட்காட்டுவெளியில் சாட்சியம் என்றொரு
களிவெறியில் அரக்கநாட்டியம் ஆடும்
அசை வளிவெளியில்
கிளைக்கைகள் உடைத்து
இலை ஆடை உதிர்த்து,
பின் மழைமோகம்
பாகம் பாகமாய்ப் போகிக்கத்
தலைக்கேற அவிழ்த்தெறிந்து.
மனத்தேக்கம் உடைத்து
சேற்றுநீர்த்தேக்கமிருந்து
ஊர் சிதைக்கும் போர்க்காலப்படையென்றே
வாயாற் பறை அடித்து நகரும்
பெரிதாய் ஒரு தவளைக்கூட்டம்.
சேற்றுவயல்கள் இன்னமும்
சிரை சிலுப்பி நீர் சிலும்ப
வளிப்பாட்டுக்கு
நீண்ட நெற்பயிரின் ஒயிலாட்டம்.
காற்று மேலுமொரு காதற்கவிதை சொல்லும்.
மலை வேம்பின் ஒற்றைக்குயில் மட்டும்
உட்பொருள் உணர்ந்து சத்தமிட்டுச் சோகம்
சரணமாய்ச் சேர்த்துச் சொட்டும்
மழைத்துமியில் இசைச் சொரிவாய்.
இத்தனையும் முடிந்திருக்க,
இன்னொருமுறை,
தன் தங்கக்கையப்பமாய்
மின்னல்,
வானத்தின் கைரேகை
ககனத்திற் கணம் வரைந்திருக்க
திருப்தி செத்து இன்றும்
அழித்துப்போகும் தூற்றல்மழை.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home