அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

குடை

சில நாளாய்ச் சரியான அடைமழை இங்கே;
நோவாவின் காலத்தே கடலோடு கலத்தே
மரம் மக்கள் மாக்கள் எல்லாம்
எடுத்துப் போ என்று சொன்ன
ஊழிச் சொரி, பொரிப்புயல்மழை,
பின், பல்லாயிரம் ஆண்டு இணையப் பார்த்திருந்து,
ஒரு நாழியில் உள்ளதெல்லாம் இங்கு
ஒழிந்து போ என்று ஓங்கரித்துக் கொட்டுதல்போல்,
பெறுமாதக் கர்ப்பம் வெளித் தள்ளிக் கருமேகம்.
ஆக முன்னே,அளவு, திசை, ஆங்காரம்
ஆரும் இங்கே அறிந்தில்லோம், முயல்தலும் வீண்வேலை.
வீட்டுத்தளத்திற்கும் வேலைத் தலத்திற்கும்
பஸ் எடுத்த காலம் போய் படகு விடும்
கலிகாலம் எனில், மனக்கணக்கிட்டுக்
கொள்ளும் இந்தமழைக் கணக்கு.

முன் நாள் வந்தவொரு முது நண்பர்,
என்றோ அவர்க்குக் கொடையாய்க் கிடைத்த
பிறந்த பயன் மேலாய் உழைத்துத்
தன் மூச்சுப் போனதென்று மூலையிலே விட்டுப் போன
மான்குறி மேலிடு ஓட்டைக் குடையன்று
அறைத்தோழர்க்கும் அடியேனுக்கும்
பொதுச் சொந்தம், இற்றைமழைக்கும் தஞ்சம்.

நான்
குளிர்வாடை போர்வைதள்ளி, முகத்தாடை காட்டமுன்
தான் எழுந்து குளித்து,
"குனித்தபுருவமும்" நெடு குரலெடுத்துப் படித்து,
நெற்றி முக்குறியிட்டு, நேராகத் தலை வார்ந்து,
இரண்டாம் தெருவாழ் தன் கொவ்வைச் செவ்வாய் காண
கோலாய்க் குறுகிக் கிடந்த குடையெடுத்துச் சிறகெழுப்பி,
குமிண்சிரிப்பொன்று கொள்க தோழ என்பதுவாய்ச்
சிதறி நகர்ந்தார் இக்காலைச் செவ்வாய் நண்பர்.
கேட்டேன்,
"போகும் வழி வரை நானும் கூட வந்து
பின் கொண்டு செல்லவோ குடை என் வேலைத்தலமும்?
ஆகுமோ இவ்வொப்பந்தம் இருவர்க்கும் அழகென்று?"
"ஆகாது;
அவளோடு பகல் தங்கி, ஆகாரம் மதியம் உண்டு,
பின், ஆபரணக்கடை வேறு நடை போதலும் வேண்டும்"
ஆகப் பின், குடை இடை வந்த இடையினத்தால்,
எம் சொல்லினம் மெல்லினம் தள்ளி
வல்லினம் தாவக் கண்டு,
"ஆருக்கு விட்டுப் போனர் அந்நண்பர் மான்குடை?"
என்றாகி, இறுதியில்,
"போ! போ!! ஓட்டைக்குடையோடு ஊரெங்கும்
உல்லாச ஊர்வலம் உவந்து உன்னவளோடு"
வெறுத்து வெளியிட நான், இதுசமயமென விலக அவர்,
வெளிக்காண் இடி, மழை, புயல் அடியுண்டு,வீசுண்டு,
பழம்குடை நேற்றைக்குப் பூத்தவள்போல் நாணிக் கோணி
துருத்தி நில் துருப்பிடி கம்பி எல்லாம்
பள்ளி விடுமுறை செல் பாலகராய்த் துள்ளி,
பின்னோ, சுடலை எரி சொந்தமென அச்சு விட்டு,
தொய்ந்து நொய்ந்த துணி குசேலர் கந்தலெனக்
கத்திக் கிழிந்து இந்திரன்கண் கோலம் கொள்ள,
குடை ஆடி, முட்டக் குடித்து மூக்காலும் வடிபவன் போல்
அங்கிழுத்து, இங்கு தள்ள, அதனோடு சேர்ந்திருந்து நண்பர்,
ஆலய உற்சவ மூர்த்தி தோள்தூக்கி
வீதி வலமிட்டு நடமாடும் பக்தரென,
ஓடி உருண்டு, ஊறி நின்ற சுவரோடும்,
தம் சுமை சுமந்து தள்ளிச் சுற்றிப்போனோரோடும்
இடியுண்டு, எழுந்தருளி,
தன் பாட்டே முன்போட்ட புல்லு அசை போட்டுப் போனதொரு
உள்வளை கொம்பெருமை முட்டி, அது முறைக்க,
பின்னும்,
குடையோடு பின்னிப் பிணைந்திருந்து பிக்கல் பெரிதும்பட்டும்
இக்குடை கொள்ளல் தன் உரிமை மட்டுமென்றெனக்குச்
சொல்லாமற் சொல்லிப் போதலுக்குப் பட்டபாடு
கண் கண்டு, மனம், ஓட்டை கொள்ளலுக்கே
எம்மிடை எத்தனை முக ஒப்பனை, உராய்வு உளம் பட்டதென்று
சட்டெனத் தன் கொள்நிலை வெறுத்து, விறுவிறென்று
வெற்று வெளிக் கொட்டும் மழை அற நனைந்தேனும்,
கரைச்சல், அலைச்சல், சிதம்பரர் கால்தூக்கு உலகாட்டம்
பெரிது ஏதுமுறாமல், சிறிதாயும் ஊறு உடல் உடைத்தேகாமல்,
அடைந்தேன் என் குறி, அலுவலகம்,
அவர் முந்திச் சுதந்திரமாய்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home