அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

பொதுவாக......

பெண்களின்
கண்களை
நான் பாடுவதில்லை.

அவை
அந்தப்புரப் பாவையர் கொள்
புரவலர்தம்
படிக்காசுக் கேங்கும்
திரையிசைப் பாவலரின்
வாழ்வுக்கெனத்
தத்தம் விட்டேன்.


முள்வேலி தொங்கும்
மனித உரிமைகள்தம்
குருதியினை,
நிணத்தினைத்
நினைத்தும்
தொட்டெழுத முடிதலில்லை.

புவி முழுக்கப்
புரட்சிவித்து புறப்படவே
போராளிகட்கு
அது
பொதுவில் வைத்தேன்.


இரவுகளைப் பாடலில்லை;
இயற்கையினைப்
படம் பிடித்தலில்லை.

காலைப் புல்லின்
நுனிக்கண்ணீரெல்லாம்
வன்னக் கவிஞர்கட்கே
வாழ்வுரிமை;
என் எண்ணக்கருக்கல்ல.


காவியங்கள்,
காப்பியங்கள்
யார்மீதும்
பாடமாட்டேன்.

நீதிநெறி,
நேர்மைவழி
கொல்லும்
அறம்
என் கைவசமானதில்லை.


தேவதையைப் சாற்றுக் கவி பாடமாட்டேன்;
தெய்வங்களைக் கவி வரி ஏற்றமாட்டேன்.

உயர்ச்சி நவிற்சியணி
இசைத்தலுக்குக்
கருப்பொருளைப் பற்றி
சிறுபொட்டுக் கருத்துமில்லை
மனப்பெட்டியிலே.


என் தின வாழ்வை மட்டும்
சொல் வடிக்கும்
என் வரிப் புலம்பல்
என்றென்றும்.

நாட்பொழுதின் நிகழ்வுகளில்
கந்தக்காற்று
வார்த்தைகளிற் தோய்த்து,
மனம் வளைத்தோட்டும்
என் மொழிக்கு
காகிதத்தில்,
கணினியில்
என் பங்குப் பாட்டு.


பொதுமனிதன் துயர் பேசாது
என் தனி அவலம் தூவுவதால்,
என் தமிழும்
பொது மனிதன் கவிகள்தம்
பட்டியலின்
கடைசி வரிகளிலே
ஒட்டிக்கொள்ளக்கூடும்.

'98 Dec. 04, Friday 17:57 CST

0பின்னூடுகை:

Post a Comment

<< Home