அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

இன்றியமையாதது தன் இருப்பு

முந்த நாள் முற்சந்தியிலொரு முட்டை பூத்தது.

நேற்றுக்காலை அது உருளப் பார்த்தது சனம்.

"கோழி இட்டது" என்றதொரு கூட்டம்,

கூகை தவறிப்போட்டதென்றாச்சு சிலர் பேச்சில்.

முதலை உருட்டிப்போக ஒரு முட்டை தனித்ததென்றும் தகவல்.

வருங்குஞ்சு, வெள்ளை, பழுப்பு, பழுத்த கறுப்பென்று நிறம் உடைந்தது
ஊர் ஒன்றுக்குள்
மூன்றாய்.

முட்டை முற்றிப் பழுத்துடைய சந்தி முற்றத்தில் முகம் முழிக்கக்
குரலெழுப்பி,
குழந்தை நான்.

கூகைக் குரலென்றது கல்லாலடித்தது கோழி குஞ்சென்ற கும்பல்.

கோழிக்குஞ்சுசுற்று பஞ்சுடல் என்று கழுத்துத் திருகியது முதலையில்
முதலிட்டோர் கூட்டம்.

கூகையென்றோர் முதலை வாலை முட்டைத் தோலுட் கண்டனர்.

புதிதாய் வெளிப்பட்ட பிறவிக்கு தனிப்பட்டு தானாய்
வினைப்படவிடாவண்ணம்
பிறக்கமுன்னே பெயர்கள், பெயரெச்சங்கள்.

சுற்றிப் பார்த்தேன் என்னை,
உள்ளே பிஞ்சாய்ச் சுருங்கிய உடலே ஒடுக்கம் விரித்து உயர
வெளியே...

மிச்சப்படி,
மற்றவர் கருத்தை மிச்சமின்றித் தின்று தனிச்சொற்களை மட்டும்
சட்டைப் பைக்குள் முட்டமுட்ட திணித்து நகரும் கூட்டம்.
அவரவர் சொந்தச்சொற்கள் சொட்டிச்சொட்டி நடைபாதைகளிற் கொட்டும்
நாலாபுறமும்.

முட்டைக்குள் இருக்கும் மட்டுமே சுகம்.
இனித் தனிக்க, சற்றே குனிந்தால் குட்டுப் போட்டுக் கொல்லக்
காரணம் தேடும் கூட்டம்.

நாசூக்குப் பார்த்தவர்க்கு, இங்கே, நாளை .... இல்லாத் தேசம்.

பிழைத்தலுக்கான தற்காப்பு, பின் பிடித்துப்போகும்;
போர் போதை சுவைக்கும், சொற்களுக்குள் நுரைத்துத் ததும்பித் ததும்பி.

வரும் பெருங்கூட்டத்துள் வளர்ந்து ஒன்றாய்த் தொலைந்துபோகும்,
என் முகம்.

தொடர்ந்து வரும் தோல்தடிக்கா வெண் முட்டைகளும்
உடையும்வரை தமக்கென இனி ஒரு விதி செய்யும்;

இவ்வுலகம் எதுவெனச் சரியாய்த் தெரியும் நாள்வரையும்
அது காக்கும்.

இருட்டில் கூட்டமாய்த் தாக்கும் கூகைகட்குள் கோழிக்குஞ்சாய் உயிர்வாழ
இயலாது.

நெறித் தத்துவங்கள் மேலதிக புஷ்டிக்கான போசாக்குணவு;
நடைமுறைத்தப்புதல்களோ வாழ்தலுக்கான தேவையின் அடிப்படை.

ஏற்கனவே முட்டையுடைத்து, உயிர்முளைத்து முழுதாய்ப் பிறந்துவிட்ட
ஒற்றை மனிதனுக்கு
எந்தவிதத்திலும் இங்கே மிக இன்றியமையாதது தன் இருப்பு.

'99 ஜூலை 25, சனி 22:10 மநிநே

0பின்னூடுகை:

Post a Comment

<< Home