அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

காலத்தின் தொலைந்த குழந்தை

வருங்காலத்தின் தொலைந்த குழந்தை நான்.
பேரரசர் பெருத்தவுந்திக்கும் அந்தப்புரநாயகியர் பந்து நெஞ்சுக்கும்
மழைமாலைப்பொழுது மைதுனப் பின் விருந்தாய்
உமிபடிந்த நெல்லுச்சோற்றை என் தோழர் அவித்திருந்த
களப்பிரர்காலத்து இருட்களின் நிழற்பொழுகளில்,
இன்றைய காடுகளில் அலைந்த குழவி இது.

நான் நட்சத்திரத்திரங்களும் அண்டமும் தொலைத்த சிறுவன்;
எரிகுழம்பு பரவு விம்பங்களின் இடைப்படு பிடியிடைத்துடிக்கும்
காலப்பூச்சி கடித்ததொரு தூக்கமிலி.
செவ்விய ஆள்கூற்றுக் கேத்திரகணிதம் பிழைக்கும்
நேரம் புதைத்தடித்த நாட்கனவு, என்றுமெனது.
ஓரடர் இருட்துளை யுள்ளிழு துகள்தன்
நேரம் தூண்டிய இயக்கம்,
என் மெல்லிய உடலின் கோண லெரும்புரு அசைவு.
வெளியிற் தேங்கித் தங்கிய
குறையெரி மரக்குற்றி.

எண்ணிலா எந்தன் யாத்திரையிடையே,
தொன்மை ஞானத்திற் கேங்கு மன்னரைக் கண்டேன்;
கூடவே கண்டேன், தத்துவப் பிறப்பையும் ஊர்வையும்.
ஊர்ந்தவை உருமாறி, உன்மத்த மதமாகி பேரொலி
ஊளையிட்டுக் கொல்லவும் கண்டேன்,
மெய்ஞானமும் விஞ்ஞானம்தன் உயிரும்,
மேலும், பொல்லாக் காலத்தே,
தானே வேரோடித்துளீர்த்திரு உள்ளத்துறுத்தலும்.
ஆயினும், நானோர் காலப்பயணி
- பார்த்தலும் கேட்டலும் மட்டும்கூடு காலப்பயணி;
வருங்காலத்தே முடித்த இடத்தே
முன்னே வினை புரிய அனுமதியிலா காலப்பயணி.

இன்றைக்கு,
முன்னைய உடல் இன்றைப்போதுக்கிணங்க தள்ளப்பட்ட மனிதன்.
அந்தோ! இன்னமும் எனது எண்ணத்தே பயணித்து,
வருங்காலம் தீர்க்கும் சமர்களைப் போரிட
வெகுகாலத்தின் முன்னே தள்ளுற்ற சிறுகுஞ்சு.
இ·தென் ஆசியா சாபமா?

நீயோ கூறுகின்றாய், நீ வாழ் பூமியிலே தொலைந்துற்ற ஆத்மா நானென்று.
இணங்குகின்றேன்; காலமென் காதுள்ளே நம்பகமாயோர் பேச்சுரைக்கும்,
"பேசாமல் என்னோடு கூட நட; விலகிச்செல் இந் நெருக்குவெளி
-அண்டத்தின் கழிப்பறையே விலக்கப்பட்டதொரு
முப்பரிமாண மழையூறித் தோய் கடதாசிப்பெட்டி."

காலத்துக்கும் வெளிக்குமிடை நெய்யுற்ற மீன் வலையின்
துளையிடையின் முடிவினிலே மீண்டும் சந்திக்கக்கூடும்
இருவர் நாம்; அல்லது,
எம்மிருவர் விதிகளும் தோலுரித்துத் துகளாகிப் போகவும்கூடும்
தொலை தொலைவாய்.

ஏற்றுக்கொள் இதை, என் அன்பே.
எனது வெளி, நேரத்தின் நிறப்படு திரிகளாற் புரியப்பட்டது.
டாலி தன் நினைவுகளின் நிலைப்பிலோ முக்கோண மணீநேரத்து முகத்திலோ
கௌவி முடியத் தவித்துத் தோற்ற முயற்சி.
நானொரு காலப்பயணி, கட்டிப்படு e=mc^2 கட்டியமைத்து,
கணத்தையும் பல்கூறீட்டுக் கட்டு மாலைக்கருகற்
பொதிகளின் தொடர்களிற் தொலைந்து போனவன்.
எனது வெளியை இங்கிருக்க ஒத்து, உடலை அவ்வெற்றிடத்தேயிட்டு,
தொலையந மோனநிழல்நேரத்துப் பைகளுள்ளே சறுக்கி மறைவேன்
நான்.

நானொரு தொலைந்த குழந்தை
- மீட்சியுறா கவிச்சாபம் நிரம்புசிந்தை நேரங்கொள்
பேதலித்த விஞ்ஞானிகள் போன்றோன் யான்.
நேரத்தே பறப்பேன்; நரம்பு வலையிடைப் பசி பிறக்க,
தின்னுவேன் என்றும் வளர்ந்திடும் ஒளியோலைக்கீற்று;
அவை நகர் கதிகளின் தொனி மறந்து
நரிமூளை ஒலியலைகளுடன் வாள்வீசுவேன்

வேறொரு பால்வீதி புதை குளிர்ந்திடு சூரியனின்
சுடு ஹீலியம்குமிழிகளிடை எனைக் கேட்பாய், நீ.
மோதித் தகர் மூர்க்கவால்வெள்ளியின் ஆடும் மூசு வாலில்
பேச்சிற்கூட எனைக் காணலாம் நீ.
செவிட்டுக் செவியினால் எனைக் காணலாம்;
இருட்டு விழியினால் எனைக் கேட்கலாம்;
வேண்டினால், ஒரு நகர்ப்பூங்காவில்
மாலைப்பொழுதே கூடவும் நடக்கலாம் என்னுடனே.
என்றோ செத்ததோ ருடுவின் மின்னு புள்ளி,
இவ்வுலகிடை மெல்ல ஒளிருபொழுதெல்லாம்,
நாளையின் இந்த ஓய்வில்லா ஒல்லிக்குழந்தை,
நேரத்திடை நடுங்கு பூமிப்பரப்பு வேண்டா ஓடும் அகதி,
ஊசிப்பரவும் நாளைதன் சொற்றுளிகளை உதடு விரித்துரைப்பான்.

இந்தக் கணத்தே, என்னை ஆழமறியா நேரத்தே தொலையவிடு;
விழைந்தால், முடிந்தால்,
உந்தன் சமன்படா மூளைக்கலங்களின் இடுக்கிடை எனைப் பதமிடு.
ஒரு போது, செங்குத்தாக உன் பாதையை மேற்கிருந்து கிழக்கே கடக்கலாம் நான்;
மேலுமொருமுறை வடக்கிருந்தும்; மீண்டும்,
விண்ணிந்து மண்ணுக்கு இறுதித்தடவை எரியுடுவாய் மின்னலடிக்கவும் கூடும் நான்.
நேரத்திரவத்துத் தொட்டிச்சுழி அவிழ் புதிர்களில் சடுதியிற் மிதக்கும் பயணமே எனது.

நான் கடக்கலாம்; அல்லது நான் இறக்கலாம்; ஆயினும் இன்றைக்கு,
உன்னிடை வெளியிருந்து நேரச்சட்டத்தே என் ஆத்மா துறந்திழியும்.
நானொரு காலத்தே கிறுக்கியலை நாடோடி, செங்கிரகத்து மண் தோய்,
ஓயா சொல்நட்சத்திரத்திரம் விசிறு கழைக்கூத்தாடி

0பின்னூடுகை:

Post a Comment

<< Home