அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

குறுகுறுப்பு (ஓர் உடைந்த உரை உதிர்வு)

எச்சமிட்ட காக்கைகளை
கற்களற்று பழைய பத்திரிகை சுற்றி
காற்றினிலே விரட்டிப்போகும்
பருப் பழுத்த பருத்த வெறும் கை இரண்டு.

குடை விரித்த அரைக்கிழட்டு
அறியாத பெண்கள், ஆத்திரமாய்
அங்கொன்றாய் இங்கிரண்டாய்,
முகம் பார்த்ததற்கோ பாராததற்கோ
மொத்தத்தில் மோனத்தே
முழுதாய் முறைத்துப் போவார்கள்,
காறித் துப்ப
இடம் சரியில்லையாம்,
இவன் முகம் தொலைவாம்
என்று விட்டு.

கறுப்புப்பட்டிக் கைக்கடிகாரம்,
முற்றாய் நின்றிருக்கவேண்டும்;
அல்லது, வேக முயற்பாய்ச்சலாய்
வேட்டை விலக்கி
ஓடித் துடித்திருக்கவேண்டும்.
ஆயினும், அ·து எதையும்
அநேகமாய்
மாற்றப்போவதில்லை,
முன்னைப்போலவே.

யாரோ கிட்டத்தே கசட்டுக்காதுக்குடம்பி
ஊடாயும் அறுத்துச் சொன்னார்கள்,
"அரசாங்கப்பேரூந்துகள்
இப்படித்தான் ஐயா,
பதறாமல் குந்தியிரும்.
வெப்பம் வெறி ஆயுதமாய்
ஆயிரம் கொன்றிருக்கிறது" என்று.
அந்த யாரோவின்
நானைக் கௌரவிக்க
நிதானம் தப்பி, நேர்மை செத்த
ஒரு நாலு கணக் குந்தல்.
திரும்ப, எட்டிப்பார்த்தலும்
தூசுப்படலம் மறை கண்மணி பரந்து
தொக்கி நின்று தொங்கிய ஒற்றைக் கேள்விக்குறியும்.

போன தகரப் பேருந்து மீள
இரண்டு முறை
விநோதம்காண் ஓட்டுனருடன்
இம்முறை தரிக்காமலே
திரும்பிப் போக,
சுவரொட்டியில் ஒட்டற்பசுவொன்று
ஒரு பெரும் தலைவரை
அவர் சாயமிடுமுள்மீசை, இற்ற தன் அற்றைமலம்
ஓட்டிக்கிடத்தல் காணாமல் ஆணவமற்றதுவாய்
ஒரு வாயில் உள்வாங்கியது;
தலைவர் போன தேர்தலில்
விற்ற வாக்குறுதிக்காய்,
ஒரு பட்டினிச் சா தவிர்க்க
தன்னையே பலியிட்டார் என்க.

காகங்கள் மாட்டின் முதுகா
இவனின் தலையா என்று
எச்சக்களம் என்றறிய
இரட்டையாய்ப் பிரிந்து
கோஷ்டி ஒன்றை ஒன்று
கொத்திக் கொண்டன
வட்டப்பறத்தற் கூவலின்
இடையிடையே,
வெட்டிப்பேச்சு வீரர்களாய்.

வியர்வை நாறி விரிசல் விரிந்த
நேற்றைய பத்திரிகையில்
இராசி பலன் பார்க்க,
-விரும்பிய பொருள்
வீடு வந்து சேரும்- என்றது
வில்லுக்குக் கீழே
அம்பாய்க் குத்தி.

நம்பிக்கையுடன்,
எட்டிப் பார்க்க,
வேண்டியது தூரத்தே பொட்டாய்ப்
பொறி வெயிலுட் தெரிந்தது போலும்.

இரட்டை மணிநேரம்,
இத்தனையும் கூடக் கிடந்து
ஓரக் கண்ணாற் பார்த்த
எனக்கு தேடலின் திகைவு
என்னவென எட்டிப் பார்க்க எண்ண,
எங்கிருந்தோ வந்திறங்கியது
இதுவரையில்லாப் பெரியமனுசக் கூச்சம்;
சத்தமின்றி எட்டி நடை விட்டு
வீடு போகையிலும்
என்ன அது என்று மனம்
தன் இஷ்டப்படி வெட்டிப்பட்டியல்
நெடுங்கணக்காய்ப் பின்னலிட்டு
பின் மனத் தர்க்கம் பண்ணி
ஒவ்வொன்றாய்ப் பொதி கட்டிக்
கரிக்கோடிட்டு வெட்டி,
மீள ஒட்டி, சட்டென்று
என்னவென்று எட்டிப் பார்த்திருந்து
வந்திருக்கா மூடப்புத்தியிலே,
போலி பெருந்தோரணைத் தூங்கலிலே
ஒரு சிறு செறிவேதனைக் குட்டிட்டுப்போய்,
அன்றிரவு பாய் சட்டென்று
உதறிப் படுக்கையிலும்
சுண்டெலிக் குறுகுறுப்பை என் மனக்குடிலில்
ஒரு உள்ளங்கையற்றும்
நெடு நகங்கள் சுவர் விறாண்டும்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home