அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

முப்பாட்டனொருவன்

பெற்றெடுத்தபோது
அம்மாவும் அவளைப் பெறு அம்மாவும்
தம்முட் செப்பிக்கொண்டாராம்,
என் நீள்மூக்கு, விரிகண்கள்,
அகல் நுதல் மேலோடு சுருள் குஞ்சி,
அத்தனையும் அப்படியே ஒத்தியெடுத்துப்
பெட்டி இட்டுப் பூட்டிவைத்து, பின்,
இன்று புழுதி தட்டி போட்டவை, எப்போதோ
செத்தவொரு முப்பாட்டன் தன்னுடையதென்று.

அம்முப்பாட்டன்,
"பெரும் சித்தன்; பல்வித்தை அறி வித்தகன்;
தன் கைப்பொருள் அத்தனையும் விட்டு,
ஊர்க்கழனி, சிற்பங்கொள் கற்கோவில்,
வித்தகர்கட்குக் கல்கூடம், பிச்சை எடுப்போர்க்கு
உச்சி வெயிற்பொழுது உண்டுறங்கச் சத்திரம்
அத்தனையும் கட்டிவிட்ட அருங்கொடையோன்;
அவனிட்ட வித்து வருஷத்தே வளர் விருட்சம்விடு
விழுதுவாழ் பட்சியெல்லம் கனிவிதையெடுத்து
பாரெங்கும் கொட்டி நட்டு விடப்போனதுதான்
நாம் காணும் இத்தமிழுலகம்", இப்படி
எத்தனையோ சொல்லிவைத்தார் என்னவர்கள்,
நான் நடை பயில, கதை பழக,
உடை அணிய, மடை திறந்து கவி பயில,
தானியம்தின் கோழி, கொத்திக்
கொத்திப் பொறுக்குதல்போல், அங்கும் இங்கும்
பத்துப் பதினைந்து ஒற்றுமைகள்;
என் வயதோடு எண்ணிக்கை பூச்சியம் பின் சேர்க்கும்.
செவிவழிவிழு அம் முகமறியா அகமறியா முப்பாட்டன்
வித்தகத்தில் ஒரு குட்டி அகப்பை அள்ளியெடு
ஞானம் ஆகி வரவேணுமெனப் பேராசை எனக்குந்தான்.
ஆக,
கண் கண்டவர்க்கு, விண்டு விபரம் கேட்டவர்க்கு,
சொந்தப்பட்டமெல்லாம் பிருஷ்டம் பின் மறைத்துவைத்து
அப்பாட்டன்தன் எட்டாம் பரம்பரையின்
எட்டியிருபேரன் என்றே எப்போதும் என் அறிமுகம்.

அப்பாலே, சென்ற சில காலம்முன்,
கடற்காற்றோடொரு நண்பன் சொன்னான்,
"உன் பாட்டன் இடையிடை பேசிவைப்பார்
எதிரும் புதிருமென்று என்றென் பாட்டன் சொன்னார்."
மனம் வெம்பி, நட்பு உடைத்து,
அன்னையிடம் நான் சொல்ல, அவள் சொன்னாள்,
"உன் முன்னோர் பொன்னுடைத்த புத்தியினர்;
பித்தளையோ பத்தின் மறை
முடிவிலிக்கும் அவர் சித்தமில்லை."
பின் முற்கோபம் இறங்கு சிந்தை முன்னே நின்றாடியது,
-என் நல்லவற்றில் ஒற்றுமைத்துளி விண்டதுபோல்
ஏன் மற்றவற்றில் ஒட்டிக் கண்டதில்லை என் அன்னை?-
எனக்கேனோ,
முன்னோர் குறை காணா அம்மாதன் குறைபோல்,
அவர் அச்சுப்பதிப்பென்ற என் சித்த முன்வெகுளிதனைப் போல்,
அத்தனை நற்செய்கை முப்பாட்டன் மனதுள்ளும்
வாழ்ந்திருக்கும் ஏதோவொரு மனித வழு அழுங்கு என்றே
பட்டிருக்கும்.
ஆயின், அது ஒத்துக்கொள்ளலிலேதும் தவறு இங்கு கண்டிலேன்;
முற்றிலும் புனிதனெனில், ஒருவன் நற்செய்கையெல்லாம்
வெறும் கண்முன்னற்ற காது வழிவரு தெய்வப்படு கண்ணகிக்
கதையேயாகும்;
அவன் கருத்து கைக்கொள் காத்திரமும் உளம் சற்றே அற்றுப்போகும்.
ஆக,
கண் கண்டவர்க்கு, விண்டு விபரம் கேட்டவர்க்கு,
சொந்தப்பட்டமெல்லாம் பிருஷ்டம் பின் மறைத்துவைத்து
அப்பாட்டன் எட்டாம் பரம்பரையின்
எட்டியிருபேரன் என்றே இப்போதும் என் அறிமுகம்.
கூடவே,
அவன் குறை ஒத்துக்கொள் அகமும்
முகம் முன்வைத்தே புன்னகித்து நான்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home