அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

நகங்கள்

விரல் நகங்கள் வளர்ந்ததென்றாய்,
என்னதுவும்
துஞ்சும் பிள்ளைப்பிஞ்சுக்கைகளதும்;
அ·து உன் முலை பாலுக்காய் முத்தமிட,
திட்டமிடாக் கீறல் உன்மார்பில்
என்று நான் அறிவேன்.
நீயோ அறியாதவள்போல் அறிக்கை விடுகிறாய்.
உன் பின்புறமோ,
புதிதாய்ச் சேற்று நிலமிருந்து பனி படர்ந்து
நெடுதாய் எழுந்திருந்த நாற்றுப் புனிதமென்றாய்;
பார்க்கவில்லை நான்;
ஆயினும், ஆயுள்கூட வாழ்
உன் வார்த்தை நம்பி,
அது சுகமாய்ச் சொறிய,
சுவர்ணமயமாக்கச் சுரண்ட எத்தனிக்கவில்லை;
என் நகமும் வளர்க்கவில்லை.
என்னதுவைத்தான் என்றும்
முளைக்கவே விட்டதில்லையே நீ!
என் முதுகு,
நமைச்சல் சொறியவும்
அழுக்குச் சுரண்டவும்
உன் இரு மாதம் முந்து நகம்
இதமாய் இருந்ததேதோ உண்மைதான்;
ஆயின்,
இன்றோ கட்டிலிற் கிடந்து
கலந்து முத்தமிடு பொழுது மட்டுமல்ல,
எட்டச் சும்மா போகையிலும்,
இயல்பாய்த் தட்டிப் பட்டதுபோலும்
இரணம் பொங்கு இரத்தம் வடி வடுக்கள்
என் புறத்தில், முன்னாய், பின்னாய்,
அகத்தில், பெரிதாய்ச் சிறிதாய்;
உளச்சுத்தம் நீ என்பதுபோல்,
மனச் சிக்கல், கிலேசம் ஏதுமின்றி
என் வருத்தம் ஏதும் ஏறெடுத்தும் காணாது,
சத்தமின்றி மெலிதாய்ப் பாடி, எழிலாய்ப் பயின்று
வாசல் விட்டத்தை எட்டிப் போவது ஏன்?
உன் நகம் செஞ்சாயம் பூசியதால் மட்டும்,
என் உடற் கலம்,
நரசிம்மம் பிளந்துற்ற கசிபுவாகிப்
பீறீட்டுக் காண்பதெல்லாம்,
செவ்விரத்தம் இல்லை என்றாகிடுமா, என்னவளே?
நீள நகச் சாய மினுக்கமும்,
கொத்த நில் கொடு நாக நயனம் போலோர்
அபாய அழகுதான், என் அன்புக்குரியவளே.
வெண்டி நீளநெடுவிரல் உனதென்பதால்,
நீ நகம் நீட்ட,
சிறு மிளகாய் என் விரல் மட்டும்,
கூனற் பிறைகூடத் தன் கோபுரம்
என்றாக்கல் கூடாதோ?
உன் அறியாக்குழந்தையின்,
அன்புடன் உனைத்தாவிக்
கவ்வவெழு குட்டைக்கைகளின்
வெளித் தெரியாக்கூர் நகங்களின்
அணிற்சிறுகீறற் பதிவுகட்காய்,
அண்டம் அதிர ஆவேசம் கொண்டாடி,
ஆர்ப்பாட்டம் அனைவர்க்கும் சொல்பவளே,
அவரவர்க்குப் பரஸ்பரம்
இதமாய்ச் சொறியும்வரைதான்,
எம் இருவரதும் இன்பம் காண
இணைந்த
விரல் நகச் சுதந்திரம்;
இதை விட்டு,
என்னது வேண்டுதல் மொட்டை வெட்டல் என்பதும்,
உன்னது நெய்யிட்டு புனிதயாகம் வளர்த்தல் ஆதலும்,
எழுதாமல் நீ இட்டதொரு
சட்டத்திற் சேர்த்தியிங்கு செத்தல் வரை என்றானால்,
இனியும் ஒன்றாய் ஓட்டை ஒற்றைக் கூரையின் கீழ்
ஒட்டி உறவாடி உண்டு குட்டியிட்டுக் களித்திருத்தல்,
முட்டாற்றனம் என்று வெளிச்சமிட்டுப் பட்டதில்லையோ,
சொல் பெண்ணே,
உன் நுதல் வட்ட ஒட்டுப் பொட்டிற்கும்
நேர் வகிட்டு பின் மல்லிப்பூப்பின்னலுக்கும்
இடையோடும் சிறு மூளைப்புத்தி மின்னலிலே?

0பின்னூடுகை:

Post a Comment

<< Home