அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

நளப(¡)(ங்)கம்*

"வேலை மிகக்கேடு,
காலமும் கஷ்டமும்;
வேண்டா வேதனை,
விடப்பா, வெளியுண்போம்",
நவில் நண்பன்,
"உடலுக்கிங்குறையினும் தஞ்சம்,
உணவுக்கு,
மக் சிக்கனும்
மெக் ஸிக்கனும்
புகுவாயோ பேடி, நீ?
சேலை கட்டு சிகண்டி"
என்ற என் சினங் கண்டு,
அனலிடையிடு அறுக்குளாவென,
துடித்துப்பின், துவண்டனன்.
ஹா! என் சொற்தூண்டில்துவள்புழு, அவன்.
காய்கறிக்கடை சென்ற கதை கதி இன்னொரு
கணணியேறாக் காவியம்; அது விடும்,
கட்டுட் சமையலுக்கு வாரும்.
இ·து இளங்கத்தரி,
அது கடுகு காண்,
அப்பாலே அரிசி, கல்நெல்லற்று பஸ்மதியாய்,
வேறு, இவையிவை இன்னென்ன அறிவீர்.
புதுமை செய் சொர்க்கார் நான்;
வையவிரிவுவலைச் சங்கத்தமிழ்ச்
சமையற்பக்கமிருக்கப் பயமேன்? பங்கமேது?
படிவமெடுத்தது வலக்கைவேலாய்
வடிவமெடுத்தது வாகாய்க் கூலாய்.
தாளிப்போம் என்று,
தண்ணீரிட்ட கடுகு
கொதிஎண்ணெய்க்குளிடல் கண்டு,
வெண்காயம் உரித்துக்
கண்ணீர்விட்டழுத கைகேயிதன்
கடைசி வேண்டுதலாய்,
"விடவேண்டும் இத்தொழில்
விபரம் அறியாய் நீ"
என அவனரற்ற,
"விட்டேனோ, சுவர்ணபூமிக்குக்
கப்பலோட்டிய வீரம், சுவறிடுமோ
பேதை? கடுகிற்கு அஞ்சல் தகுமோ,
இது முறையோ? தள்" எனப் பொங்கி,
அண்ணன் ரஜனியென, அலாக்காய்த்
தூக்கிப்போட்டு, அதிலரை தரை கொட்டி,
"சட்டச்சட வென்றெட்டுத் திசையடி"
ஈழத்து, உயிர்கொல் 'செல்', தூணிலுந்
துரும்பிலுமென்றாகி,
ஓடிஒளிந்தேன்,
அடுப்புப்பின் மேசைப் பங்கரின் கீழ் நான்.
என்ன, அவன் கதியோ?
ஒளியோ(ந்தோ)டு கதியிலும் மேல்;
ஆர் கண்டது?
குளிர் சாதனப்பெட்டி உள்ளேயோ,
ஆள் உயிரோடு இல்லையோ?
வெளிவந்து,
"வேண்டாம் விஷப்பரீட்சைச் சோறுகறி,
ஊற்று உடன் தோசை; (வயிறு, தலை)வலி குறைவு"
என முட்டையிட்டகோழிக்கேரல்கேட்டு,
"உடன் உண்ண, சாம்பாரோ, சட்டினியோ?"
-தேம்பாமற் கேட்டுவைத்தேன்;
முன்வெடித்த கடுகெல்லாம்
தன்முகத்தேவெடிக்கலுற்று,
"நாயே,
நாள் முழுக்க
நான் பட்டினி;
இதற்குள்
ஆர் கேட்டான்
உனை, சட்டினி?"
நான் ஏன் போக, அரைச்சட்டினியாய்?
தோசை ஊற்று சத்தமின்றி,
வேறு சத்தம் போட்டறியேன்.
பின், சிக்ஸருக்கடித்ததை
பவுண்றிலைனில் விட்டவன் போல்,
ஒட்டு உடம்பு ஒட்டுதற்காய் உணவுக்கு,
ஊற்றிய உடன்தோசை சுட்ட தட்டு
உடன் ஒட்டி, உருகி, உருவி,
வெந்து வெளிவந்த வினை, உப்புமா எனக்
காண் நெற்றிக்கண் நரன்,
"பக்கத்துச்சீனன், இரவு
பத்தரைக்கும் திறந்திருப்பான், கடை;
குக்கரை மூடிக் கட்டு அங்கு குறுநடை",
செப்புதல் கண்டு, விட்டால்,
ஒரு விள்ளலிலே அள்ளிவிழுங்குவான் ஆளையென
திரிபுரம் எரித்த விரிசடைச்சிவனென நானும்
ஊழித்தாண்டவம் ஆடிக்களைத்த அரன் அவனும்
வெளிவந்து, விட்டோம் எட்டுப்பிறவிக்கும் எம்சமையல்:
முட்டாள் நளன்,
கெட்டான் உடல் கறுத்து; பின்,
பட்டான் வதை சமையலால்;
பின்னென சொல்ல?
கைப்பக்குவம் குப்பைத்தொட்டி தின்னல் கண்டு
முதல் முகர்ந்தருகோடி,தன் முகம் வெறித்துச்சீறி,
பின், வால் கூரை வளை படப் பறந்தோடி,
மறுநாள், தன் தலை காண,
நக்கலாய்ச் சிரித்ததென்றான் நண்பன்,
பக்கத்தறைப் பைங்கிளி தன்
பஞ்சுமிட்டாய்ப் பொமெரேனியன் (நாய்).

-*'97 வைகாசியில் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home