அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

தொலைவு அல்லது பெறுகை (?)

ஒரு கதிரை இருத்தலில் மட்டும்
ஒரு முழு இரவு தொலைந்து போயிருக்கிறது.
எதற்காக இருத்தல் என்பதும்
எதுவாய் இருத்தல் முடிந்ததென்பதும்
எதிர்த்திசைக் கதைகளாக முகம் முறித்துக் கிடக்கும்
இருள் வெறித்த மனமும் செயல் விறைத்த சித்தமும் போல்;
வெறு இருத்தல் மட்டும் ஒரு புது இரவு தின்று போயிருக்கிறது
சில போன கால மனப் படிவுகள் அரித்துத் தின்று
நிழல் வெளி, படிவு அகல் உள்ளிடம் துப்பி,
ஒரு பகலுக்குத் தூக்கம் திணித்து, தான் தூங்க.
கதிரை மட்டும் கிறிச்சிட்டுத் தன் பாரம் சொல்லித் திட்ட,
எலி ஒன்று கணினிப் பதிப்பி மேலாய் எட்டிப் பார்த்து
முகம் திருப்பி ஏதோ மூஞ்சி நீட்டி முகர்ந்து வளைந்தோடும்.
வராத தொலைபேசியில் யாரோ யாருடனோ
ஏதோ தொலை பேசிக்கொண்டிருக்கலாம் என்று தோன்றும்.
தூரத்து இரவுவண்டிகளின் அதிர்வுகளில்
சாளரங்கள் தூக்கம் குழம்பு குழந்தையாய்ப்
பரிந்ததிர்ந்து சிணுங்கி மீளச் சத்தம் தொலைத்துத் தூங்கும்.
எங்கோ போன உயிரின் உடல் அகற்ற,
என் வாயிலில் வைத்தியசாலை வண்டி ஒன்று,
நீல விளக்கு ஒளி கொட்டு மழையில் ஒலியுடன்
சொட்டி விரைந்தோடிச் சிவப்பாக,
சக்தி, சடத்தில் நனையுமா
என்றொரு சிந்தனை சில நேரம் தின்றது.
மீள, மிஞ்சிப்போன நேரத்தே,
சில வெற்றுத் தேனீர், இனிப்பிட்ட எறும்பு இற்ற ரொட்டி...
அவையும் தின்று சமிபாட்டிற்கோ,
மீளப் பசிக்கவோ செயல் தேடி
10'*15' அறையுள் நடையில் கால்கள் அலையும்;
நினைவில் நேரம் நகர்த்தும் உபாயம் தேடல் தொடரும்;
மிகுதி அமர்கைச் சில நேரம்,
என் காத்திருப்பு, தூக்கம் தின்பதற்கா, இல்லை
தூக்கம் தின்னல், காத்திருப்பதற்கா?
என யோசித்து உருகி ஒழுகி உருண்டோடும்,
மேசையில், சுவரில், விதானத்தில், விட்டத்தில்
அறை நிறைத்து, என் சுவாசம் இறுக்கி
மழைச்சாரல் அடி ஜன்னல் திறக்க நான் செய்தற்கு
ஏதோ செயல் கண்டிருதல் நான் உணர.
எலி மீளத் தன் முகர்தலில் ஏதோ தேடி
தன் முன் செய்கை தவறெனத் தோன்றி,
முன் செய்கைக்கு முன் செய்கை சரியெனப் பட்டு
திரும்பத் தேடுதலில் திருப்தி காண
பழைய திக்கு நோக்கித் தன்
கூர் நகம் பற்றியோடும் நம்பிக்கை
தான் கொள்தல் காட்டி.
தேடுதலுக்கு அத் தேடுதலேதான்
அர்த்தமெனப் படுகிறதோ அதற்கு?
தூரத்தே மீள இன்னொரு இரவு வண்டி
சிக்காக்கோ நோக்கி I 94 ல் நகரும்.
அவ்வண்டியின் இரு முனைதொடு தொடர் ஓட்டத்தை,
சுற்றிச் சுற்றி முகர்ந்தோடு எலியின் ஓட்டம் ஒட்டி
இணைத்து ஏதோ எண்ணி நேரம் ஓட்டி,
நான் கட்டிடத்திற்குக் காவலாய்,
கதிரை எனக்குக் காவலாக,
இன்னமும் காத்திருக்கிறேன்
தூக்கம் தின்று எதையோ வரும், தரும் என எண்ணி
விரல் இரண்டு சாணாய் மேசை விளிம்பு நீளம் அளக்க.
குருட்டு எலி திரும்ப வெளி முகர்ந்து
நம்பிக்கை வைப்பதில் மட்டும்
நம்பிக்கை வைத்து எதிர்த் திசை
என்னைக் கண்டு மூஞ்சி நீட்டி
மீசை துடிக்க ஓடும்,
தன் செயலில் நாணமின்றி
ஏதோ செய்தல் நிகழ்குது பார்
என்று சொல்லி விரைந்து.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home