அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

ஒரு கிறுக்கனைப் போல.....

ஒரு கிறுக்கனைப் போல.....
சுழலச்சுழலச் சுலபமானது உலகம்.

பருப்பிலும் வெறுப்பிலும் வளர்ந்திடு தேகம்
நெருப்பினில் எரியும் நதியென உருகும்.

அதுவரை ஒரு கிறுக்கனைப் போல
சுழலச்சுழலச் சுலபமுன் உலகம்.

கருக்கினை நுனிக்கொள்ளு பனைவடலியைப் போல
தலைக்கிறுக்கினில் தருக்கிடுக்கும் உரப்பினிலோட்டம்.

செருக்கினில் செருப்பிடு நடைபடு நிலமும்
சறுக்கிடக் கூசும்; தரித்திடத் சரிக்கும்
.........சுழலச்சுழலச் சுலபமென் உலகம்.

அமுக்கிட அமுக்கிட வெடிப்பது தர்க்கம்;
தடுத்திடத் தடுத்திட முளைப்பது சர்ப்பம்
ஊர்ந்திடு பாட்டையில் பெருவிரற்கடிகள்
உச்சி ஏறிடும் ஆலம் உடல்படுநீலம்.

நுனித்திரிப்படு விழியென எரிக்கின்ற விளக்கு
உள் துடித்திடத் துடித்திட அழிபடும் அழுக்கு.
கருக்கினிற் பிறப்பது இருட்டினில் ஒழிக்க..
தனித்திடு உலகமோ அவ் விருட்டினி லடக்கம்
பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்படும் வாழ்வு;
இறப்புக்கும் பிறப்புக்கும் இடைப்பட்ட தேது?

நிலை கடக்கவோ மடக்கவோ அகப்படா வேலி
மறை கண்ணுக்கு முன்னே வசப்படா வாலி.
சிரம் சுருங்கிடச் சுருங்கிட விரியுமாம் ஞானம்
விரிதலின் பின்னெழும் ஒடுங்கிடக் காமம்.

ஒரு கிறுக்கனைப் போல,
அருட்பட மனது,
சுழலச்சுழலச் சுலபமாம் உலகு.

படையுண்டு அழிவுண்டு பார்த்திடும் காலை
படைப்பது அழிப்பதும் அற்ற தென் வேலை.
ஒடுக்கிட பிறனினை நோக்கிடும் விழியில்
உவந்திடும் மனமோ ஒழித்திடும் சுவாலை.

சடத்துவ அழிப் பது சக்தியின் பிறப்பு
சக்தியின் செறிவு சடந்தனி லிருப்பு.
கறுப்புக்கும் வெளுப்புக்கும் இடைப்படு தேசம்
கவிப்படு கிறுக்கனின் தரித்திடா சுவாசம்.

ஒரு கிறுக்கனைப் போல...
அலைதலும் அகழ்தலும் ஆகியதாலே...
சுழலச்சுழலச் சுலபமென் கயிறு.

வில்லுக்குச் சொல் தேடிக் காண்பதுமில்லை
விரலுக்கு இதம் வேண்டி எய்ததுமில்லை.
கல்லுக்கும் முள்ளுக்கும் கால் தேங்கிப் போனால்
வனம் தாண்ட மலை மேவ வழியேதுமில்லை.

இரவொடு பகலூடிப் பிறந்திடும் போது
இரவென்ன பகலென்ன எழுதிடப் பொழுது.
துளையூடிச் சரமோடி வழிந்திடும் உட்சாறு
தரையோடப் பழம்மூடித் தரி வெறும் கோது.

ஒரு கிறுக்கனைப் போல தெருப் பருக்கைகள் பொறுக்கி
நதிக்கரைப் புதர்த் தரைச்சருகுகள்மீது படுத்திடு போதில்
சுழலச்சுழ உட் கவருமாம் அலைச்சுழி.

இருட்டிலும் முகட்டிலும்
வெளிப்படும் மோனத்தும்
திரிசடைப்படு கிறுக்கன்,
தெருப்பட நடப்பான்.
தடக்கிடும் குழிகள்
தாண்டியும் முளைப்பான்.

ஒரு கிறுக்கனைப் போல.....
சுழலச்சுழலச் சுலபமாம் உலகம்.

(unedited scribble of the day)
'00/04/17

0பின்னூடுகை:

Post a Comment

<< Home