அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

கோவணநாட்டின் கொடைவள்ளல்கள்மீதொரு சீட்டுக்கவி

வள்ளல் வாழ்த்து
-------------

வாழ்க நீர் எம்மான்;
கன்னனும் குமணனும் போல்வீர்;
தன்னிலை மறந்தும் அள்ளிக்கொடுத்தீர்
பொன்னையும் பொருளையும்
பிற கோவணத் தும்மவர் செய்கைகட்காய்.

மீதியும் மிதியும்
-------------------

கோவணநாட்டின் கொடைவள்ளல்கள்
கோடித்துணி அள்ளிக்கொடுக்கையில்,
தேசியக்கொடியிலும் தீராத
முடைநாற்ற வீச்சம்.

மேற்குத்திசைக்கொரு வேண்டுதல் விடுக்கும்
மாற்றுக் கோவணம் இல்லான்தெரு வள்ளல்கள்,
அரச ஆவணத்தின் பேரில்
காலொடுங்கு முடுக்கு விடுத்து
கழற்றிக்கொடுத்தார்
தம் கவட்டிடுக்குக் கோவணம்,
வேற்றூர் யாசிப்போனுக்கு,
வெறி மிகுந்து
வீட்டிலிருப்போர்
கழுத்திறுக்கக் கைக்குட்டைகளாய்.

திகம்பரர் தெருவினிலே
அதை மறையா
அம்மணங்கள் அசிங்கமில்லை.
கௌபீனம் தந்தோர் காந்திகள்;
கைவிட்டுப் பெற்றோர் கௌதமபுத்திரர்.

கைப்பிடி துணி கண்டோர் பூமியிலே,
கவட்டுமுடுக்குக்கும் கழுத்துமுடிச்சுக்கும்
இடையில் இருப்பதில்லை,
ஏதும் இடைவெளி;
உள்ளத்தே நொடிந்தார் கழுத்தினிலே
முடித்துக்கொண்டதெல்லாம் பிச்சைக்கௌபீனம்.
உள்ளதில் வலிந்தார் இடையிலே
ஏற்றிக்கொண்டதெல்லாம் எழிற்கைக்குட்டை.

அரைக்கோவணத்தார் தேசத்திலே,
நேர்த்தியற்றதேனும், நெய்த நூற்குட்டை,
கொடுத்தோர் கொடுங்கோலர்;
கொண்டோர் கொலைகாரர்;
குலைந்தோர் கொத்தடிமையர்.

இப்படியாய்,
எல்லாமே வல்லமையாய் உள்ளவர் போல்,
இல்லாதார் நாட்டிலும் உண்டாம், பல்லாயிரம்
கோவணக்கொடுத்தலும் வாங்கலும்;
கூடவே கொழுவி வரும்,
இல்லாமையின் இருப்பின் கருநிழலும்
கையள்ளிச் சொல்லிச் சொரியும்
முள்ளுப்பாத்தி மூச்சு முட்டிக்குத்தும்
இறைமையின் ஏழ்மையும் வறுமையும்.

14/ஜூன்/'00

0பின்னூடுகை:

Post a Comment

<< Home