அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

மணற்றிடர் மாந்தருக்காய்....#

இங்கே,
படகுகளை இழந்துவிட்ட
மணற்றிட்டு மனிதருக்காக
எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
*****

எதைப் பற்றியும் எவரும்
அவரவர் சைக்கேற்ப
எழுதலாகாது, சுண்டெலியின்
சுருங்கற் றலையைத் தவிர.

உன்னைப் பற்றி உன் அண்ணனும்
என்னைப் பற்றி என் தம்பியும்
மற்றவரைப் பற்றி அவர் மாமனாரும்
மட்டுமே மடக்கி மடக்கி எழுதலாம்
வரிக்கவிதை என்றாலும்
எலியைப் பற்றி எவரும்
இழுக்கலாம் சிறிய வால்.

புலியைப் பற்றி பூனை பேசக்கூடாது;
புழுவைப் பற்றி பூச்சி பாடக்கூடாது;
எலியைப் பற்றி மட்டும் எவரும் பேசலாம்;
ஏனென்றால், இங்கே நாம்
எல்லோரும் சாம்பற் பூனை.

கழுகைப் பற்றிக் கழுகே கதை படிக்கலாம்;
நரியைப் பற்றி நாயே குரல் கொடுக்கலாம்;
எலியைப் பற்றி எவரும் உதைக்கலாம்;
ஏனென்றால், எல்லா வலியும் எலிக்கே
நாமெல்லாம் இங்கே நாட்டாமைப்பூனை.

கலியைப் பற்றிக் கடவுளே கதைக்கலாம்;
வரியைப் பற்றி விதிப்பவனே வாங்கலாம்;
எலியைப் பற்றி எவனும் அடிக்கலாம்;
ஏனென்றால், அடிக்கவும் கிழிக்கவும்
நாமெல்லாம் திமிர்த்த கறுப்புப்பூனை.

******
என்னை விடு எனக்கென்ன குறை?
எழுதிக்கொண்டிருக்கின்றேனே
எலியைப் பற்றியாவது,
எவரையாவது பற்றியேதாவது;
என்னவரை, மண்ணவரை,
எங்கேனும் ழிமணற்றிட்டில்
திக்கற்றுத் தனி நின்றவரை,
படகை, கடலை, மீனை, தமிழை,
நிலத்தை, நெருப்பை, பனையை, முனியை,
நினைவை, கனவை, சனியை, பனியை,
சளியை, வளியை, வலியை, கலியை,
இரவே கவிந்த இருளின் செறிவை,
குனிந்த புருவத்தை, கொன்ற நற்காலத்தை,
பனித்த சடையை, பாவக்கரங்களை,
மதர்த்த கொங்கையை, மடிந்த பெண்டிரை,
உடைத்த பொற்பாதத்தை, உடையா நன்நம்பிக்கையை,
முனித்த சேனையை, முடியாத் துயரத்தை,
வனைத்த பானையை, வள்ளியை, மலைக்குறமாதை,
சினைத்த கர்ப்பத்தை, சிதிலித்த பிண்டத்தை,
நரிப்படு மனிதரை, நாய்ப்படு நம்வாழ்க்கையை,
தமிழ்ப்படு பெருந்தாயகத்தை, தவறிய எம் கட்குறிவீச்சை,
குறைப்படு நோக்கினை, கொல்குற்றப் பெருஞ்சாட்டினை,
எதைப்படவோ இருக்காமல் எழுதுவேன், எழுதுவேன்
இங்கே எங்கோ என் உயிரிரந்த பூமியில்,
தங்காவோட்டங்காண், தமிழ் எழுத்தாணி இற்றல்வரை.

இதில் வயப்படா நண்ப, எம் திசை கிளைப்படு மிங்கே.
புறப்படு நீ போ, போய் புக்குன் உடற்சிறைக்குள்.
மாது அணைப்பினுட் சேரு; நம்மூழ் மறந்துறவாடு.
சினைப்படப் பெருக்கு; சிக்கிக்கொள் உன்னுள்ளே செய்சித்தம்;
வசித்திரு வுலகு தானே வழிப்படச் சிறக்குமென் றன்றோவுன்னிருப்பு?

நினைவிற் கடற்பரப்பில் வாழ்வேன்; என் கைக்களைப்பினைக் காண்பேன்.
அந்தோ!
மணற்றிடர் மாந்தர் மீண்டும் கடல் புறப்பட்டார் கண்டேன் யானே.
செல் திசைக்குறிப்பறியா மூடர், மீண்டும் வலிந்து
சென்றார் வடக்கினை வழியென் றெண்ணி.
உன்னில் வடக்கிருந் திறந்தால் வாழ்வி
லெமக்கு வழி பிறக்குமோ,
சொல்
- கடல் மணற்றிட்டே?

******
இதிலேதென்றாலும்,
என்னையிங்கு விட்டுவிடு;
எனக்கென்ன குறை இனி?

படகுகளை இழந்துவிட்ட
கடல் மணற்றிட்டு மாந்தருக்காய்
கவி பாடிக்கொண்டிருப்பேன்,
ஒரு பனிப்பசுமைத்தேசத்து,
குளிர்பதன அறையிருந்து.

17 ஜூன், 2000

# "A group of Tamil refugees has been refused entry to India and
handed over to the Sri Lankan navy on a remote uninhabited island off
India's southern coast." - BBC, Saturday, 17 June, 2000, 15:56 GMT
16:56 UK
http://news.bbc.co.uk/hi/english/world/south_asia/newsid_795000/795230.stm

0பின்னூடுகை:

Post a Comment

<< Home