அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, June 05, 2004

அந்தகம் அறுந்ததும் அந்நாளே....

இன்றைய நாளில் அன்றைய இரவு,
ஒரு தேசம் தன் தலைக்குத் தானே செந்தீ மூட்டிக் கொண்டது.

தன் இன்னுயிர் இற்றுப்போனாலும்கூட
சிரம் வேறு உடல்வேறு என்றாக்கி விடுவதென்று
சினம் பிறக்க துற் சங்கற்பம் பண்ணிக் கொண்டது
தேசத்தின் செங்கோல்,
மொழிக்குருதியில் குளித்தெழுந்து
இனச்சகதியில் குதித்திருந்து,
செம்மை தொலைத்து இன்னும் இரத்தச்சிவப்பாகி.

அந்தச்சிலரின் தொலைவீச்சுக்கண் பிடுங்கி விசிறியதில்,
ஒரு திண்ணை தூங்கி நோஞ்சற் சமுதாயம்
தன் பகற்குருட்டுப்பார்வையும்
மொன்னைத்தனம் தின்ற சோற்றுச்சுகக்கனவும்கூடத்
தொலையக்கண்டது.
சில காலம்
நெற்றி நேராக்கி
வளைமுதுகு நீள்கோடாய் நிமிரத் திமிறியது.

அன்றின் இன்றையதினமொன்றின்
அவம் சேர் ஐம்பத்துமூன்று உயிர் பிரிப்பில்,
இன்னும் ஓர் ஐம்பதினாயிரத்தின் அழிவு
ஆயுதங்களின் கூர்முனையில்
உறுதியாய் சட்டம் போட்டு
உத்தரவாதமாக்கப்பட்டது
அரசு தொங்க விட்ட எழுதாப் பட்டயத்தால்.

திறந்து வைத்த பண்டோராவின் போர்ப்பெட்டியில்
இருந்து பிறந்து வந்த குழந்தைகளும்
பிருஷ்டங்களின் மேலே
வரிவரியாய் வால்களுடன்
திரண்டு வந்ததாகத்
தம் சிகைக்குத்
தீ வைத்தவர்கள்
திகைப்பூண்டு மிதித்துக்
குதித்துச் சொன்னார்கள்.

பின்னர்,
வரியுடற்குழந்தைகள் தம்முள்ளும்
வளர்ந்தவேளையில்
வெகுவாய்க் கீறிக்கொண்டன.
ஓர் உதரம் பிறந்த வௌவால்கள்
பகல்வெளிச்சக் குருட்டில் தம் உதிரங்களையே
உறுஞ்சிக் கொன்றன ஒன்றை ஒன்று
வஞ்சத்தில் மிஞ்சி.

சில சோர்ந்து போய்ச் சோரம்போயின
எதிரிக்கூகைகளின் எடுபிடிவேலைக்கும்
அந்நிய மயில்களின் எச்சில் இலைகளுக்கும்.
மிஞ்சிய சில மூர்க்கம் மீறி
சிலவேளை தம்மதியைக் முழுக்கிரகணம்
கொலைப்பாம்பாய் மழுக்கி விழுங்கவும் கண்டன.

ஆயினும் என்ன?
எம்மில் எவரும் இங்கு மறக்கவில்லை,
இன்றைய நாளில் அன்றைய இரவு,
ஒரு சின்னத்தேசம் தன் தலைக்குத் தானே
அந்திவான நிறத்திற்
செந்தீ மூட்டிக் கொண்டதையும்
திறந்த பண்டோராபெட்டியிலே
விழி சிவக்க, வாயெல்லாம் முழு வேட்டைப்பற்களுடன்
வரிவாற்குழவிகள் எழுந்ததையும்.

ஆண்டுக் காலம் கழிந்தபின்னும்,
தீ தொடர்ந்து எரியும்; வெகுவாயும்
வீதி, வயல், வீடு, வேறு இயல்தகு வழியெல்லாம்
புகை வீசிப் புயலாகி, பொங்குபுனலாகி பொசிந்து
நீறு படுத்தி நெறி கெட்டு, கெடுத்துப் பரவும்.
பற்றிய தீ இன்னும் பயங்கரமாய்ப்
பிரசவிக்கும் புதிதாயும்
ஒரு கோடி கொடிய கொள்ளிவாய்ப்பிசாசுகள்,
ஒரு பிண்டத்தில் சிறு போர் உலக்கையிடித்தாலும்கூட.
கோரைப்புல்லெல்லாம் கொல்லும் ஆயுதமான
கொடூரத்தை உலகு மீள ஒரு யுகத்திற் காணுதல்
போலிருக்கும் இந்த நரயாக நிகழ்வு,
நாடே ஒரு பெரிய ஓம குண்டலமாக,
மக்கள் அங்கங்களின் துண்டங்கள் அவிர்ப்பாகமாகி.
தேசம் சிசு மயிராற் பொசுங்கி நாறும்;
நரபலிமாந்தர்கள் கால் மாற்றிக் கைதூக்கிக் களிநடனம் புரிந்திருப்பார்
சுடலை மண்டையோட்டுக் கபாலிகராய்.

தீ பரவாத் தேச முடுக்கிருந்து பரவும்,
காவி ஆடையில்
கௌதமன் பாதைப்போர்வையில் இருந்து
கொலைமுடுக்கும் குருதி உச்சாடனங்கள்
முற்றும்துறந்த மொட்டையுரு
மனக்குரூபிகள் உள இருட்குகையிருந்து.

நர வேட்டைக்குப் புதிதாய்க்
கண்படாமிட்டுப்
பூட்டுவார் சிறுபாலகரை
ஆயுத வண்டிகளில்.
கொண்டைச் சேவல் யுத்தம் என்ற பேரில்
கோழிக்குஞ்சுகள் கொக்கரிக்கும் பாவனை பண்ணிக்
கேரலுடன் ஒரு முறை கூவி, உடல்கூறிட,
மிதியுண்டு அழிந்து போகும்,
மண்ணுள் மக்கிப்போக.

அடுப்பு ரொட்டி சுட்ட
பெட்டைகளும் குண்டெடுத்து உடல் கட்டி
சுட்டுவிளையாளும் என் நாட்டில்
இனி வரும் காலங்களில்,
கருப்பை முட்டைகளும்
ஓடு சிவத்து
வெளிக்குதித்து
முகக்கவசமிட்டுப் போரிடலாம்.

ஆயினும் என்ன?
எவரும் இங்கு மறக்கவில்லை,
இன்றைய நாளில் அன்றைய இரவு,
தேசம் தன் தலைக்குத் தானே செந்தீ மூட்டிக் கொண்டதையும்
திறந்த பண்டோராபெட்டியில்
வரிவாற்குழவிகள் எழுந்ததையும்.

ஆனாலும்,
வெகுவாயே
ஆட்சியர்க்கும்
அந்நியர்க்கும்
அதிகாரத்துக்கும்
நிகழ்நேரத்தை
அடகு வைத்து
மனம் மரத்து
மறந்து விட்டோம் எம்,
வாழ்வின் தொலை இலக்கும்
ஆயுத முனை இலக்கும்
என்றெனக்குப் பட்டிருக்கும்
ஒரு பதினைந்து ஆண்டுகள் மடிந்தபின்,
இன்று '98 ஆடி 23.